விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்களால், கார்களுடன் விவசாயிகள் வசதியான வாழ்க்கை












முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்க ளால் 3 மடங்கு அறுவடை செய்து வசதியாக வாழ்கிறோம் என பீகார் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள பாலிகன்ச் பகுதியில் பி.பி.கே.எஸ் என்ற விவசாய சங்கம் உள்ளது. இதில் பாலிகன்சை சுற்றியுள்ள 55 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்த பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை நான்கு முறை சென்று அங்குள்ள விவசாயிகளை சந்தித்தார். அவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘டிபாக்‘ அமைப்பு திட்டத்தின் மூலம் விவசாய தொழில்நுட்பங்களை அவர் கற்றுக் கொடுத்தார். தரமான விதைகளை பயிரிடுவது, பயிர் களை பாதுகாப்பது, மண்ணின் வளத்தை பாதுகாப்பது, ராபி, காரிப் பருவங்களுக்கு இடையே மூலிகை செடிகளை பயிரிடுவது போன்ற பல தொழில்நுட்பங்கள் குறித்து அங்குள்ள விவசாயிகளுக்கு கலாம் பாடம் எடுத்தார்.

ராஷ்டிரபதி பவனில் கலாம் இருந்த போதும், அவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். டிபாக் அமைப்பு விஞ்ஞானிகளின் ஆலோசனை களை பாலிகன்ச் விவசாயிகள் தொடர்ந்து பின்பற்றி னர்.  இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் பாலிகன்ச் பகுதியில் அறுவடை 3 மடங்காக அதிகரித்துள்ளது.







இது குறித்து கோபால் சிங் யாதவ் என்ற விவசாயி கூறுகையில், ‘‘ஒரு ஏக்கரில் 9 குவிண்டால் நெல் அறுவடை செய்த நாங்கள், கலாம் ஆலோசனையால் தற்போது 27 குவிண்டால் அறுவடை செய்கிறோம். ஒரு ஏக்கரில் 5 குவிண்டால் கோதுமை அறுவடை செய்தவர்கள், தற்போது 12 குவிண்டால் அறுவடை செய்கின்றனர்’’ என்றார்.  அறுவடை 3 மடங்கு அதிகரித்ததால் இங்குள்ள விசாயிகள் கார்களுடன் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.

பெரியவங்களிடம் ஆசி வாங்கிடுங்கோ..

பொங்கல் திருநாள், பெரியவங்களிடம் ஆசி வாங்கிடுங்கோ..

வாங்க சார்..வந்து கியூல நில்லுங்க‌..

தைப்பொங்கல் திருநாள்




எனதன்பு வலைப் பதிவு ரசிகர்கள்/பார்வையாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும்,
என் இதயம் நிறைந்த
தைப் பொங்கல் மற்றும்
தைப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்

நீங்களும் கொண்டாடுங்கள் ...........நீங்களும் பொங்கலிட..


பொங்க வைக்கும் முறை


தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.



எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பெருமையை பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் தருவதால், இதனைத் தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம். தைத் திருநாளாம் பொங்கல் பொழுது புலர்ந்திட, புதுவாழ்வு மலர்ந்திட என் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

''காமராஜர் யாரு தெரியுமா..?'' ''விஜய் தெரியுமா..?''






ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.





செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________
நன்றி ஜூனியர் விகடன்

ஏங்கல்ஸ் ராஜா, M.B.A (AGE. 27), விவசாயி





தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!


"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!




"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.



வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.


முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"

ஏங்கெல்ஸ் ராஜா அலைபேசி எண் : 94421-21473

நன்றி : இளமை விகடன்