மகாத்மா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாத்மா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கன்னியாகுமரி பற்றி அண்ணல் காந்தி அடிகள் எழுதியது......



பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.


பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.
எனது அனுபவத்தையும், எனது சகாக்களின் அனுபவத்தையுமே
இப்போது நான் கூறியுள்ளேன்.

இளம்பெண் சர்மிளா "ஒளியேந்திய பெண்" சில துளிகள் உங்களுக்காக..






நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..




** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியன் இந்த அற்புதமான பதிவை பதிவிட்டு உள்ளார். அனைவரும் ஈரோம் சர்மிளாவை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மறுபதிவு...

நன்றி கார்த்திகை பாண்டியன்.

தில்லையாடி வள்ளியம்மை - 2

தில்லையாடி வள்ளியம்மை


தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல்
விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண்

1898 - 22.2.1914

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை
விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு
போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத்
தேடினர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை
முதலாளிகளோடு முரட்டுத்தனமாக சண்டையிட்டனர். அதனால் தங்களது ஆதிக்கத்தில்
இருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை
இறக்குமதி செய்துகொண்டனர்.

அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி
என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு தன் மனைவி
மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி.

முனுசாமிக்கு தென்னாப்பிரிக்காவில் 1898_ஆம் ஆண்டு பிறந்தவள் வள்ளியம்மை.

எதிர்கால இன்பக் கனவுகளோடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால்
அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ 3 பவுன் தலைவரி
கட்ட வேண்டும். வாக்குரிமை கிடையாது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள்
நுழையக்கூடாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக
அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. இவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள்
வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன. சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.

இந்தச் சூழலில்தான் 1893_ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை
ஓராண்டிற்குள் முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் வந்தவர், அங்கே
இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறினார். அதை
எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.
ஓராண்டல்ல; ஈராண்டல்ல; _ இருபத்தியிரண்டு ஆண்டுகள் (நடுவில் 2 ஆண்டுகள்
நீங்கலாக) தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார்.

இந்தியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற
கிளர்ச்சியைத் துவக்கினார். அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப்’ உச்சநீதிமன்ற
நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்த நாட்டில் இனி ‘கிறிஸ்தவ
சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள்
மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது’ என்பதே அந்தத் தீர்ப்பு.

இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள்
அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு
உரிமை இல்லை என்றும் ஆயிற்று.

இத்தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி
இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டத்தை வளர்த்தார்.

அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா
பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள்.
காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை
விரைந்து மூட்டின.

புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த
ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது வள்ளியம்மையின்
தன்மான உணர்வைத் தாக்கியது.

வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும்
இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை, அப்போது அவளுக்கு வயது பதினாறுதான்!

அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்திஜி,
இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த
திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே
அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும்
வன்கொடுமைச் சட்டம் இது!’’ என்றார் காந்தி.

1913 _ ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச
முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு
கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் _ கஸ்தூரிபா,
வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.

‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’ என்று வள்ளியம்மை முன்
வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச்
செய்தது! ‘எங்கள் தேசத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை’ என்று பிரிட்டிஷ் அரசு
பேசி வந்த ஆணவத்திற்கு அன்றுதான் அஸ்தமனம் தொடங்கியது! காலனி ஆதிக்கத்தின்
கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது!

ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத
முழக்கத்துடன் முன்னேறியது.

நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க்,
டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன்
இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான்
இயன்றவரை தொண்டு செய்தாள்.

நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.
அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை
நிறுத்தம் செய்தனர். தமது தமிழ்மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும்
உற்சாகமானாள் வள்ளியம்மை.

போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது,
எல்லோரும் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும் சிறையில்
அடைக்கப்பட்டனர்.

பதினாறு வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறை ஏகினாள். ஆனால்
சிறை அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக்
கேடான சூழ்நிலை. சிறை அறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி,
அதிலேதான் மலஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும்
அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும்.
தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள்.
‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’
என்றான் வெள்ளைக்கார சிறை அதிகாரி.

‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு
விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டாள் வள்ளியம்மை.

அடுத்த சில நாட்களில் அவளது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவள் கவலைக்கிடமான
நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். அதனால், தண்டனைக் காலம்
முடியும் முன்பே, அவசரம் அவசரமாக வள்ளியம்மை 1914_பிப்ரவரி 11_ஆம் நாள்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி
வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

வீட்டில் கந்தல் துணி போலக் கிடத்தப்பட்ட வள்ளியம்மை அடுத்த பத்து நாட்களில்
22.2.1914 அன்று இறந்து போனாள்.

வள்ளியம்மையின் மரணம் காந்தியின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.

‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை
இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள்.
மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்!
அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று மனமுருகி
எழுதினார்.

ஆம். அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன்
தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்டன.

ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம்
ஒன்றை எழுப்பினார் காந்தி.

தனது சுயசரிதையில் பல இடங்களில் வள்ளியம்மையை நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல்
எழுதுகிறார் காந்தி.

தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்! ஒருமுறை
சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச்
சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின்
முன்னால் நின்று கொண்டு, ‘‘இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள்
ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்துப்போனான்; திரும்பிப்
போனான்.

காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும்
வள்ளியம்மையின் தியாகத்தைக் குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி
கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.

‘‘தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன்
எதிர்நின்று அன்று தன்னைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இன்று இந்தியன் கோட்ஸே
சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்ற நம்மருகே இல்லையே....!’’
என்று காந்தி தனது கடைசி மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?

1997_ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா
முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, விழா எடுக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’
வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே

தில்லையாடி வள்ளியம்மை - 1

"வாழ்க நீ, எம்மான், இந்த
வையகத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க "
என்பார் மகாகவி பாரதியார்.

அன்னைத் தமிழ் மொழி மீது மாறாக் காதல் கொண்டவராம், நம் தேசத் தந்தை
காந்தியடிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவரின், திருக்குறளிலும் பெரும்
ஈடுபாடு கொண்டிருந்தார்.

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக,
எனும் குறள் நெறியைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நம்
காந்தியண்ணல்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்றது உப்புச் சத்யாகிரகப் போராட்டம்.........

அதன் பின்பு 1932 ஆம் ஆண்டு, காந்தி - இர்வின் ஒப்பந்தம் மீறப்பட்டதைக்
கண்டித்து நாடு முழுவதும் எழுந்த சத்தியாகிரகப் போராட்டத்தில்,
காந்தியடிகள் கைது செய்யப் பட்ட போது, அதை எதிர்த்து, திருப்பூரில் தடையை
மீறி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது.

' வெள்ளையனே வெளியேறு ', இயக்கம் 1942 ஆம் ஆண்டு, நடந்தது.

1937 ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் மற்றும் மரியல்
போராட்டம்.

1940 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம்.......

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து
பாடுபட்டவர், ஐயனாரின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை.
இந்தியருக்குத் தேசியமும் இல்லை......... தேசியக் கொடியும் இல்லையென
கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான்
உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு
நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .
கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை
வர்ணங்கள்தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறை
செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய
சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்
போராட்டம்.... இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு
ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள்,
இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

இன்றும் நம் இந்தியப் பெண்டிரின் இரத்தத்திலும், ஆழ் மனத்திலும் அண்ணல்
காந்தியடிகள் காட்டிய சத்தியப் பாதை வேறூன்றி இருக்கிறது என்பதை நம்
அன்றாட வாழ்க்கையிலும் காண முடிகிறது.............

எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களின் சூழலில் கூட, அஹிம்சை
முறையைத் தானே இன்றும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அது
மட்டுமல்லாமல், குடும்ப நன்மை கருதி, எத்துணை சத்தியாகிரகங்கள் நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்? ஒரு குடும்பம் நல்ல மேன்மையான நிலைக்கு
உயருவதற்கும், குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கவும், ஒரு பெண் எத்துணை
தியாகங்கள் மேற் கொள்கிறாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆக காந்தியம் இன்றும் நம் இந்தியப் பெண்களின் வடிவில், ஒளி வீசிக்
கொண்டுதான் இருக்கிறது என்பதை நல் மனம் கொண்டோர் எவரும் மறுக்க இயலாது!!




பவள சங்கரி

உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்

உலகைத் தாங்குவது அன்பு

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.

* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே.

* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற
நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.

அமைதி தரும் உண்ணாவிரதம்

* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று.
ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே
அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே
தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல
லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு
பயன்பட்டிருக்கிறது.

* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில்
உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை
வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே
கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.

* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம்
மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய
நம்பிக்கை தேவைப்படும்.

* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன்
தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம்
அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும்,
அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.

* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும்
அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின்
மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.

* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன்
உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.

* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும்
பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.

* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக்
கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த
நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே
மிச்சமாகும்.

வார்த்தைகளற்ற இருதயம் வேண்டும்

பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும்.
கடவுளை வேண்டிக் கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த
அர்த்தத்தில் உள்ளுக்குள் இறைவனுடன் தொடர்பு கொள்வதும்
பிரார்த்தனையே. எப்படியிருந்தாலும் பலன் ஒன்றுதான்.
வேண்டிக் கொள்வதாக இருந்தால்கூட, ஆன்மாவைத்
தூய்மைப்படுத்தும் படியும், அதைச் சூழ்ந்துகொண்டுள்ள
அறியாமையையும், இருட்படலங்களையும் போக்கும்படியும்
வேண்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும். தன்னிடமுள்ள
தெய்வீகத் தன்மை விழிப்படைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன்,
பிரார்த்தனையின் உதவியை நாடித்தான் தீரவேண்டும். வெறும்
சொற்களின் அலங்காரமோ அல்லது காதுகளுக்குப் பயிற்சி
அளிப்பதோ பிரார்த்தனை அல்ல. அர்த்தமற்ற சூத்திரத்தைத்
திரும்பத் திரும்பக் கூறுவதும் பிரார்த்தனை அல்ல.

ராமநாமத்தை எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறினாலும் அது ஆன்மாவைக் கிளறவில்லையாயின், அது
வீணேயாகும். இருதயமற்ற வார்த்தைகளைக் காட்டிலும்,
வார்த்தைகளற்ற இருதயமே பிரார்த்தனைக்குச் சிறந்தது.
பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.
பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.
எனது அனுபவத்தையும், எனது சகாக்களின் அனுபவத்தையுமே
இப்போது நான் கூறியுள்ளேன்.

காந்தியின் பொன்மொழிகள் & பிரார்த்தனை

1.சோர்வை அகற்றும் பிரார்த்தனை

* என் உயிரையே காப்பாற்றி வந்திருப்பது
பிரார்த்தனைதான். பிரார்த்தனையின்றேல், நீண்டகாலத்திற்கு
முன்பே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென பொது
வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகக் கசப்பான
அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன என்பதை என் சுயசரிதையிலிருந்து
நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவை எனக்குத் தற்காலிகமாக மனச்
சோர்வை உண்டாக்கின. எனினும் நான் அந்தச் சோர்வை அகற்றும்
ஆற்றல் பெற்றிருந்தேனெனில் அதற்குக் காரணம் பிரார்த்தனை
தான்.

* சத்தியம், எனது வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே இருந்து
வந்திருக்கிறது. ஆனால், பிரார்த்தனை அவ்விதம் இல்லை.
அவசியம் காரணமாகவே என் வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு இடம்
ஏற்பட்டது. பிரார்த்தனை இன்றேல், நான் மன நிறைவுடன் இருக்க
முடியாது என்ற நிலை ஏற்பட்டதே அதற்குக் காரணமாகும்.

* நான் பிரார்த்தனையிலும் நம்பிக்கையின்றியே
வாழ்க்கையைத் தொடங்கினேன். இளம்பருவத்தில் இதனால் சூன்ய
நிலை எதுவும் தோன்றவில்லை. ஆனால், வாழ்க்கையின்
பிற்பகுதியில் உடலுக்குணவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு
ஆன்மாவுக்குப் பிரார்த்தனை அவசியம் என்பதை உணர்ந்தேன்.

* உண்மையில் பிரார்த்தனை ஆன்மாவுக்கு எவ்வளவு
இன்றியமையாததோ அந்தளவுக்கு உடலுக்கு உணவு அவசியமில்லை.
ஏனெனில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி
பட்டினி கிடக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால்,
‘பிரார்த்தனை பட்டினி’ என்ற எதுவும் இல்லை. உணவு
மிதமிஞ்சிப் போவதைப் போல, பிரார்த்தனையில் மிதமிஞ்சுவது
என்பதற்கே இடமில்லை

2.கீதையை படியுங்கள் மாணவர்களே!

கீதையின் 18 அத்தியாயங்களையும் படித்து ஆராய்ச்சி
செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மூன்று
அத்தியாயங்களையாவது கவனமாக படியுங்கள். இந்த மூன்று
அத்தியாயங்களிலிருந்து சில ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துக்
கொள்வதின் மூலம் அந்த அத்தியாயங்களின் சாரத்தை தெரிந்து
கொள்ளலாம். கீதையின் மூன்று இடங்களில், எல்லா
கொள்கைகளையும் விட்டுவிட்டு இறைவனையே சரணம் அடைந்துவிட
வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கீதை எல்லோருக்கும் அன்னை. அவள் யாரையும் பிடித்து
வெளியே தள்ளுவதில்லை. கதவைத் தட்டுவோருக்கு அவள் அன்புடன்
கதவை திறந்து அடைக்கலம் அளிக்கிறாள். கீதையை உண்மையாக
படிப்பவன் ஏமாற்றம் என்பதை அறியான். அறிவுக்கே எட்டாத
ஆனந்தமும், சாந்தியும் அந்த பக்தனுக்கு ஏற்படுகிறது.
எனினும் அத்தகைய சாந்தியும், ஆனந்தமும் சந்தேகவாதிக்கோ
அல்லது அறிவையும் புலமையையும் குறித்து இறுமாப்பு
அடைபவனுக்கோ ஏற்படுவதில்லை. பணிவுள்ளவனுக்கும், மனதை
சிதறவிடாமல் முழு நம்பிக்கையுடன் கீதை அன்னையை
வணங்குபவனுக்கும்தான் அத்தகைய அமைதியும், ஆனந்தமும்
உண்டாகின்றன.

விடியற்காலம் கீதை பாராயணத்துடன் ஒவ்வொரு நாளும்
அலுவல்களை ஆரம்பிக்க வேண்டுமென நான் மாணவர்களுக்கு ஆலோசனை
கூறுகிறேன். நான் துளசிதாசரிடம் மிக்க அன்பும் பக்தியும்
கொண்டவன். வேதனையில் ஆழ்ந்துள்ள உலகத்திற்கு ராமநாம
மந்திரமாகிய சிறந்த மருந்தை கொடுத்த அந்த அண்ணலை நான்
போற்றி வணங்குகிறேன். நீங்கள் கீதையை படிக்கவும் ஆராய்ச்சி
செய்யவும் முற்பட வேண்டும். அதைப்படித்தால் உங்களது
ஒவ்வொரு விருப்பத்தையும் அது நிறைவேற்றும்.

3.உண்மையான பக்தன் யார்?

ஒரு பக்தன் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது
இரக்கமே உருவானவனாக இருக்கவேண்டும்
அவன் இறுமாப்பும் தன்னலமற்ற்வனுமாக
இருக்கவேண்டும்
குளிரையும்,வெப்பத்தையும்,சுகத்தையும்,
துக்கத்தையும் சமமாக கருதவேண்டும்
எப்போதும் மன்னிக்கும் சுபாவம்
உள்ளவனாக இருக்கவேண்டும்
போதுமென்ற மனம் கொண்டவனாக இருக்கவேண்டும்
தான் செய்யும் தீர்மானங்களை உறுதியுடன்
செயல் படுத்துபவனாக இருக்கவேண்டும்
தன்னையே கடவுளிடம் அர்ப்பணம்
செய்தவனாக இருக்கவேண்டும்
அவனால் யாருக்கும் பயம் ஏற்படக்கூடாது
அவனும் எவரையும் கண்டு அஞ்சக்கூடாது
மகிழ்ச்சி,துயரம், பயம் ஆகியவற்றிலிருந்து
அவன் விடுபட்டவனாக இருக்கவேண்டும்
அவன் தூய்மையானவனாகவும் , நற்பணிகளை
செய்யும் திறம் பெற்றவனாகவும்
இருக்கவேண்டும்
அதே சமயம் அப்பணிகளின் மூலம் ஏற்படக்கூடிய
பலாபலன்களை பொருட்படுத்தக்கூடாது நற்பலனையோ
அல்லது தீயபலனையோ அவன் துறந்துவிடவேண்டும்
நண்பனையும் விரோதியையும் அவன் சமமாக கருதவேண்டும்
தனக்கு பிறர் மரியாதை செய்தாலும் அவமரியாதை
செய்தாலும் ,தன்னை பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்
அவன் எல்லாவறையும் சமமாக கருதவேண்டும்
அவன் மௌனத்தையும், தனிமையையும் விரும்பவேண்டும்
ஒழுங்கான உறுதியான அறிவு படைத்தவனாக இருக்கவேண்டும்
இத்தனை லட்சணங்கள் உள்ளவன்தான் உண்மையான பக்தனாவான்

காப்பியும் காந்திஜியும்!

உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன்.

உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை.

இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பு:- காந்திஜியின் சத்தியசோதனை நூலின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது

இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.


தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு வெள்ளை முதலாளிகள் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் அவர் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். பாலசுந்தரம் எனும் தமிழ் ஒப்பந்தக் கூலியை அவருடைய வெள்ளை எஜமானன் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொடுமை செய்த வழக்கை ஏற்று நடத்தி அந்த அப்பாவித் தமிழனுக்கு நீதி கிடைக்க உதவியதன் மூலம் அவர் வாழ்வில் மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டது.


1894-ம் ஆண்டு "நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' என்ற பெயரில் ஓர் அமைப்பை காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்குவதற்கு வழிவகுத்தார்.


1920-ம் ஆண்டு முதல் 1947--ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார். ஆனால் அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் அவருக்குத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் அளித்திருந்தன. அதற்கு முழுமையாகக் காரணமானவர்கள் தமிழர்களே.


தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய 3 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.


பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். பல தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டனர். ஆனாலும் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதிலிருந்து தமிழர்கள் பின்வாங்கவில்லை.


வள்ளியம்மை குறித்தும் தனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தமிழர்கள் குறித்தும் காந்தியடிகள் குறிப்பிட்ட கருத்துகள் அவர் எவ்வளவு உயர்வாகத் தமிழர்களை மதித்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.


காந்தியடிகள் அரை நிர்வாணப் பக்கிரி கோலத்துக்கு மாறியதும் தமிழகத்தில்தான். 22-9-1921 அன்று காந்தியடிகள் மதுரையில் தங்கியிருந்தபோது அன்று அதிகாலையில் எழுந்து தனக்குத் துணையாக இருந்த விருதுநகர் காங்கிரஸ் தொண்டர் பழனிகுமாரு பிள்ளையை எழுப்பி கதர் வேட்டியைப் பிடிக்கச் சொல்லி இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொரு பாதியை தோளில் போர்த்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைவு வரை இதுவே அவரது உடையாயிற்று.


காந்தியடிகளின் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்து அவருடைய பணிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்றவர் ராஜாஜி ஆவார்.


காந்திய இயக்கத்துக்குத் தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர் படையைத் திரட்டியவர் காமராஜ் ஆவார்.


காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் ஜே. சி. குமரப்பா ஆவார். காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் அரியநாயகம் என்னும் ஈழத் தமிழர்.

இப்படி காந்தியடிகளுக்கு பலவகையிலும் துணையாக நின்று பெருந்தொண்டாற்றியவர்கள் தமிழர்களே.


ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா. சென்னையில் உயர் கல்வி கற்ற இவர் 1912-ம் ஆண்டு லண்டன் சென்று பட்டயக் கணக்கர் படிப்பில் சேர்ந்தார். பிறகு லண்டனில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1919-ல் இந்தியாவுக்குத் திரும்பி மும்பையில் சொந்தமாகவே பட்டயக் கணக்கு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 1928-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நிர்வாக மேலாண்மை படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். 1929-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய வரிவிதிப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது குறித்து ஒரு நூலை எழுதினார். காந்தியடிகளின் பார்வைக்கு அந்த நூலைக் கொண்டு செல்ல விரும்பினார். காந்தியடிகளின் செயலாளராக இருந்த பியரிலால் மூலம் அந்த விருப்பம் நிறைவேறியது.


1929-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டது. அவரது நூலைத் தனது "யங் இந்தியா' இதழில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதாக காந்தியடிகள் கூறியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது பொருளாதாரச் சிந்தனைகளும் குமரப்பாவின் பொருளாதாரச் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக அமைந்ததைக் கண்ட காந்தியடிகள் இதனை இதனால் இவன் முடிக்கும் எனக் கருதினார்.


காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தேசியப் பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக குமரப்பாவை நியமிக்க காந்தியடிகள் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் குமரப்பாவின் சொந்த வாழ்க்கை பெரும் மாறுதலுக்குள்ளானது. திருமணத்தைத் துறந்து காந்தியத் தொண்டராக வாழத் தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியடிகளுக்கு அவர் மீது உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையை காந்தியடிகள் தொடங்கியபோது குமரப்பாவை யங் இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பில் நியமித்தார்.


காந்தியடிகளைச் சுற்றி எத்தனையோ தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் இருந்த போதிலும் அவர்களில் யாரையும் இப்பதவியில் அவர் நியமிக்கவில்லை. குமரப்பாவை இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தார். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதியதற்காக குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு காலச் சிறைத் தண்டனை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது. ஆனால் காந்தி இர்வின் உடன்பாடு ஏற்பட்டதனால் சில நாள்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.


1932-ம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோதும் யங் இந்தியா இதழின் ஆசிரியர் பொறுப்பை மீண்டும் குமரப்பா ஏற்க நேர்ந்தது. அப்போதும் இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதையும் நாசிக் சிறையில் அவர் கழித்தார்.


1934-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் காந்தியடிகள் இவரை பிகார் பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கிருந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் துணையாக ஓராண்டு காலம் பணியாற்றினார்.


1935-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அகில இந்தியக் கிராமத் தொழில்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகக் காந்தியடிகளும் செயலாளர் மற்றும் அமைப்பாளராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் மூலம் நாடெங்கும் கிராமத் தொழில்களைத் திருத்தி அமைக்கவும் அதன் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கவும் இந்த அமைப்பு பெரும் பணியாற்றியது. கிராம உத்யோக் பத்திரிக்கா என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் குமரப்பா நடத்தினார்.


1938-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் இருந்தபோது தேசியத் திட்டக் குழு ஒன்றை அவர் அமைத்தார். பிற்காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட தேசியத் திட்டக் குழுவுக்கு இதுவே முன்னோடியாகும். இக்குழுவுக்குத் தலைவராக ஜவாஹர்லால் நேரு நியமிக்கப்பட்டார். காந்தியடிகள் மற்றும் நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க இக்குழுவில் அங்கம் வகிக்க இசைந்த குமரப்பா 3 மாதங்களில் இக்குழுவில் இருந்து விலகினார். திட்ட அணுகுமுறையில் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாகும்.


1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டு பல்வேறு தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டரை ஆண்டுக் காலம் சிறையிலடைக்கப்பட்டு 1945-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த போது "நிரந்தரப் பொருளாதாரம்', "இயேசு பிரானின் போதனைகளும், செயற்பாடுகளும்' எனும் இரு நூல்களை எழுதினார். இந்த நூல்களைப் படித்து வியந்து போற்றிய காந்தியடிகள் குஜராத் வித்யா பீடத்தின் மூலம் இவருக்கு இரு முனைவர் பட்டங்களை வழங்கச் செய்தார்.


இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு காந்தியடிகளை சென்னையில் 23-1-1946 அன்று சந்தித்துப் பேசியது. இந்தியாவின் பொருளாதார சமுதாய சிக்கல்கள் குறித்து ஜே.சி. குமரப்பா, அவர் சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோரைச் சந்தித்துப் பேசுமாறு காந்தியடிகள் நாடாளுமன்றக் குழுவை வேண்டிக் கொண்டார். எனவே அக்குழுவினர் இருவரையும் சந்தித்துப் பேசி பல விவரங்களை அறிந்து கொண்டனர். அந்த இரு சகோதரர்களுக்கும் காந்தியடிகள் அளித்த முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவருக்கு அதிகார அரசியலில் நாட்டமில்லை. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இவரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை நாடெங்கும் பரவியிருந்தது. ஆனாலும் எந்த பதவியையும் ஏற்க அவர் முன்வரவில்லை.

1947-ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகியபோது இவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் காந்தியடிகள் வற்புறுத்தியும்கூட இவர் அதை ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து பிரதமர் நேருவிடம் இவர் அளித்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு குமரப்பாவின் ஆலோசனைகளை நேரு ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச முறையில் தொழிற்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதையே அவர் விரும்பினார். அந்த அடிப்படையில் அரசுத் துறையில் கனரகத் தொழில்களை உருவாக்கினார்.


ஆனால் குமரப்பாவோ இயற்கையோடு இயைந்த தொழிற்புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மீண்டும் நிலத்தில் மழையாகப் பொழிகிறது.


ஆறுகளில் பெருகி ஓடி வரும் மழை நீர் கடலில் கலக்கிறது. இது இயற்கையான சுழற்சியாகும். இந்த இயற்கை நெறியை மறந்து செயற்படும் நாடு குழப்பத்தில் ஆழும் என குமரப்பா கருதினார்.


ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். ஆனால் காந்தியடிகளுக்குப் பிறகு அவரது யோசனைகளை ஏற்கவோ, செயற்படுத்தவோ யாரும் தயாராக இல்லை.


1950-களின் தொடக்கத்தில் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராகச் சென்று வந்தார். அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை நேரில் காணும் ஒரு வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


இந்தியாவில் விரைவான தொழில்மயக் கொள்கையும் நிலச் சீர்த்திருத்தத்தைப் பற்றி உண்மையாக எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பதையும் அதற்கு நேர்மாறாக இந்நாடுகளில் நிலைமை இருப்பதையும் நேரில் கண்டார். அந்தப் பயணத்துக்குப் பிறகு இந்நாடுகளில் நிலவும் தன்னிறைவு உணர்வை அவர் பாராட்டினார்.


மக்களின் அடிப்படை வாழ்வில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு அரசுகள் இயங்குவதை அவர் மிகவும் பாராட்டினார். உண்மையான காந்தியவாதியான அவர் கம்யூனிச நாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் பலருக்கு வியப்பை அளித்தன.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகப் பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவானதையும் அவர் கண்டார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பதிலாக அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியமாக உருவானதை அவர் கண்டித்தார்.


கொரியாவில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும், கிருமி குண்டுகளையும் வீசியதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் முன்வரவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


வினோபா பாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கமும் அவரது விமர்சனத்துக்கு உள்ளாயிற்று. நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு அதை வழங்குவதோடு பூதான இயக்கத்தின் கடமை முடிந்துவிடாது. நிலத்தைப் பெற்ற ஏழை எளிய மக்கள் அதில் வேளாண்மை செய்யவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.


அதற்கு அந்த மக்களைப் பயிற்றுவிப்பதற்குத் தொண்டர்களும் வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பூதான இயக்கம் இயங்குவது வெற்றி பெறாது என்று அவர் கூறியபோது, பலரும் அவர்மீது கோபப்பட்டனர். ஆனால் அவர் கூறியதுதான் சரியானதென்பதை காலம் நிரூபித்தது.


சர்வோதய இயக்கம் குறித்தும் அவருக்கு இதுபோன்ற கருத்துகள் இருந்தன. அதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. இதை அந்த இயக்கத்திலிருந்த பலர் விரும்பவில்லை. ஆனாலும் அவர் மனதில் பட்டதை மறைக்காமல் கூறினார்.


தேசத்தந்தை காந்தியடிகளுக்குப் பொருளாதாரத் திட்டம், நிர்மாணத் திட்டம், கைத்தொழில் திட்டம் போன்ற பல துறைகளில் அரிய ஆலோசனைகளை வழங்கி அவரால் பாராட்டப்படும் நிலையில் இருந்த நிகரற்ற தமிழர் ஜே.சி. குமரப்பா.


காந்தியடிகளின் நெருங்கிய சகாக்களாக இருந்த அத்தனை தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகியவர் அவர். ஆனாலும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்திப் பதவி நாடாதவர்.


காந்தியடிகள் எப்படி அதிகாரப் பதவிகள் எதையும் நாடாமல் வாழ்ந்தாரோ, அதைப்போல அவருடைய உண்மையான சீடரான குமரப்பாவும் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசரின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தார்.


காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகும் அவர் வழியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் உறுதியாக நடந்தவர் குமரப்பா. இதன் காரணமாகவே தன்னுடைய பழைய சகாக்களின் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். அதைக் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. உண்மையான காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்தார்.


மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அருந்தொண்டு புரிந்தார். இறுதியாக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது வினோபா பாவே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜ் போன்ற பல தலைவர்கள் அவரைச் சந்தித்தனர்.


அவருடைய சகா அரியநாயகம், சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோர் அவர் அருகேயே இருந்தனர். அவருடைய குருநாதர் காந்தியடிகள் மறைந்த அதே நாளான 30-1-1960 அன்று அவர் மறைந்தார்.


காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அந்தத் தமிழனின் 50-வது நினைவுநாள்.


யார் யாருக்கெல்லாமோ பிறந்த நாளும், நினைவு நாளும் நடத்தப்படுகிறது. குமரப்பாவைப் பற்றி நினைக்கக் காங்கிரஸ்காரர்களுக்குக்கூட நேரமுமில்லை, மனமுமில்லை.


தமிழன் நன்றி கெட்டவனாக இருக்கலாம். ஆனால், உலகம் அப்படியல்ல. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையும், அவர் முன்வைத்த மரபுசாரா எரிசக்திக் கொள்கையும் உலகளாவிய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

அண்ணல் காந்தி அடிகள் விதைத்த ஒருமைப்பாட்டுச் சிந்தனை

நம்பிக்கை,​​ அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.

அண்ணல் காந்தி அடிகள் தன் வாழ்நாளில் குறிப்பிட்டுக் காட்டிய மாநில ஒற்றுமை,​​ அதனால் உண்டாகும் வலிமையான பாரதம் ஆகிய கொள்கைகள் இன்றளவுக்கும் இந்தியாவுக்குப் பொருத்தமுடைய கொள்கைகளே.​ இத்தகைய ஒற்றுமை உணர்வை இந்தியாவுக்குள் அவர் உண்டாக்கியதால்தான் உலக சமாதானத்துக்கு வழிகாட்டும் தலைமைப்பண்புக்கு ஏற்ற நாடு என்ற தகுதி,​​ உலக அளவில் இந்தியாவுக்குக் கிடைத்தது.

இன்றைய இந்திய மாநிலங்களில் குறிப்பாக ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தனித் தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தக்கோரி,​​ தொடர் கிளர்ச்சிகள் நடக்கின்றன.​ தனி கூர்க்காலாந்து மாநிலம் வழங்கக்கோரி மேற்கு வங்கத்திலும்,​​ தனி விதர்பா மாநிலம் உருவாக்க வேண்டுமென்ற கருத்து உருவாகி மகாராஷ்டிரத்திலும் தொடர் ​ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.​ அத்துடன் மாநில உணர்வுகள் தலை தூக்கி அண்டை மாநிலங்களுடன் நடந்து வரும் பங்காளிச் சண்டைகள்.

உதாரணத்துக்குத் தமிழகத்துக்கும்,​​ கேரளத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு பிரச்னை.​ தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இன்று வரை முடிவுக்கு வராத காவிரி நதி நீர்ப் பிரச்னை.

தமிழகத்துக்கும்,​​ அண்டை மாநிலமான ஆந்திரத்துக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் பிரச்னை.​ தேசிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மாநில உணர்வுகள் மேலோங்கி உள்ள இன்றைய நிகழ்வுகளால்,​​ இந்தியா என்ற கட்டுக்கோப்பான,​​ உறுதியான ஒன்றிய உணர்வுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே தேசிய உணர்வுள்ளோரின் கவலை.

அன்னியர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட எண்ணிய காலத்தில்,​​ அன்றைய இந்தியா சிறு சிறு அரசுகளாய்ப் பிரிந்து,​​ துண்டு துண்டாய் அமைந்திருந்தமையால்,​​ அன்னியர்கள் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் அந்த அரசுகளை அடிமைப்படுத்துவதற்கு ஏதுவான சூழல் இருந்தது.​ அந்த நிலை மீண்டும் உண்டாகத் துணை போகக் கூடாது.

உடலுக்கு,​​ தலை முதல் கால்வரை எவ்வாறு சீரான ரத்த ஓட்டம் அவசியமோ அதைப்போல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும்,​​ நம் அரசியல் சாசனத்தின்படி கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளும் அனைத்துப் பயன்களும் ஒரே மாதிரி சீராகக் கிடைக்கச் செய்வது மத்திய,​​ மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.​ ​

அதிலிருந்து அரசுகள் பிறழ்கின்ற போதும்,​​ அதனால் தங்களுக்கு வேண்டிய சமநீதி கிடைக்காத போதும் அப்பகுதி மக்களுக்குத் தனித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கமும்,​​ தங்கள் நோக்கம் நிறைவேறப் போராட்டம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தலாம் என்ற எண்ணமும் உண்டாகிறது.

இந்தியா என்பது மொழிவாரி அடிப்படையில்,​​ பல மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும்,​​ இத்தகைய மாநில அடிப்படையிலான தேசியத்தின் மீதும்,​​ அதன் ஒற்றுமை மீதும் அளவற்ற நம்பிக்கை உடையவராக அண்ணல் காந்தி விளங்கினார்.​ ​

ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனியான,​​ தனித்தன்மையும்,​​ தனி மொழி மற்றும் நாகரிக நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருந்ததை அவர் பெரிதும் விரும்பி வரவேற்றார்.​ ​ அத்தகைய தனித்துவம் அந்த மாநிலங்களுக்கு இல்லையெனில்,​​ அவை தனி மாநிலங்களாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.​ ​ நம்முடைய இந்திய மாகாணங்கள் மிகப்பெரிய ஆறுகளாலும்,​​ உபநதிகளாலும் சூழப்பெற்று வல்லமை மிக்கதாய் அமைந்துள்ளன.​ அவைகளின் வல்லமையும்,​​ பூரணத் தன்மையும் போற்றுதலுக்குரியதாகவே இருக்கலாம்.

இத்தகைய உணர்வுகள் எல்லாம் அவரவர் தம் மாநிலங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.​ ​ மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் இந்தியா முழுமையும் ஊடுருவிப் பாய்ந்து,​​ பரந்து அவர்தம் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றலாம்.​ ​ அவர் வங்காளத்துக்கு மட்டுமே சொந்தமானவர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.​ தாதாபாய் நெüரோஜி மகாராஷ்டிரத்துக்கோ அல்லது பார்சிகளுக்கு மட்டுமே உரியவர் அன்று.​ அவர் இந்தியா முழுமைக்கும் உரிமையானவர் ஆவார் என்று எடுத்துக்கூறி அண்ணல் காந்தி,​​ தன் இந்திய உணர்வைப் பறைசாற்றினார்.​ அதே நேரத்தில் மாநில உணர்வுகள் நிச்சயம் மதிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ​ காந்திஜி.​ 2.5.1915-ல் மயிலாடுதுறைக்கு அவர் வந்தபோது தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.​ அவருக்குப் படித்தளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

அப்போது மகாத்மா கோபப்பட்டுச் சொன்னார்.​ ""காங்கிரசின் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது.​ ​ நீங்களோ உங்களது வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ளீர்கள்.​ ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது.​ ஆனாலும் தாய் மொழியைக் கொன்று விட்டு அதன் சமாதியின் மீது ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள்'' என்று கூறி மாநில உணர்வுகளின் அடிப்படையில் அமைவதுதான் உண்மையான தேசியம் என்று தன் கருத்தைப் பதிவு செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பும்,​​ அரும்பாடுபட்டு,​​ பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட தேச ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல்,​​ இந்தியாவின் எந்த மாநிலத்திலும்,​​ மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சென்று வரவும்,​​ அங்கு வாழவும் பாதுகாப்பு வழிவகைகளை அந்தந்த மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து செய்து தர வேண்டும் என்று கூறினார்.​ மற்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வேறொரு மாநிலத்துக்கு வருபவர்கள் நாமும் இந்த மாநிலத்தைச் சார்ந்தவரே என்று எண்ணும் அளவுக்கு இணக்கத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை 21.9.1947 அரிஜன் இதழில் அவர் தெளிவுபடுத்தினார்.​ எல்லா மாநிலங்களும் இந்தியாவுக்குச் சொந்தமானது.​ ​ இந்தியா எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது.​ ​ இத்தகைய தன்மையுடன் நடந்துகொண்டால்,​​ இப்போக்கையே செயல்படுத்த மக்கள் அனைவரும் எண்ணினால் மேலும்,​​ மேலும் மாநிலங்களை உருவாக்கும் எண்ணத்துக்கு வேலையே இல்லை என்ற தன் எண்ணத்தை 7.11.1947 அரிஜன் இதழ் மூலம் பதிவு செய்தார்.

இந்திய மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு வலிமையான இந்தியா என்ற பொது நோக்கத்துக்காகவும் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஒற்றுமையை வலியுறுத்துகிறேன்.​ அதுவே தேச ஒற்றுமை நிலைபெற வழிவகுக்கும் என்றும் அண்ணல் குறிப்பிட்டார்.​ எவ்வகையிலும் நாடு பிரிக்கப்படுவதையோ,​​ துண்டாடப்படுவதையோ அவர் விரும்பவில்லை என்பதுடன் அதன் விளைவு குறித்த எச்சரிக்கையையும் விடுக்கத் தவறவில்லை.​ இந்தியா மிகப்பெரிய நாடு.​ அதனுள் இருக்கும் கனிமங்கள்,​​ தாதுக்கள் மற்றும் வாசனைப் பொருள்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதுடன் அத்தகைய வளங்களை அவர்களால் உருவாக்கவும் முடியாது.

நாம் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருந்தால் உலகில் சக்தி வாய்ந்த அதிகாரம் கொண்டவர்கள் நம்மீது ஆக்கிரமித்து இந்தியர்களிடமிருந்து,​​ இந்தியாவைப் பறித்து விடக்கூடும்.​ அத்துடன்,​​ நம்முடைய அனைத்து வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடும் என்ற எச்சரிக்கையை 17.11.1946 அரிஜன் இதழ் மூலம் விடுத்தார்.

அண்ணல் காந்தி வலியுறுத்திய நாட்டுப்பற்று என்பது இந்தியாவின் நன்மைக்காகவும்,​​ அதன் வலிமைக்காகவும் மட்டுமன்றி,​​ அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டுமென்று எண்ணினார்.​ ​ இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் பின் நாளில் அவரது நிழலாய் இருந்த தேசியத் தலைவர்கள் பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்கள்.​ ஒரு மனிதன் நாட்டுப்பற்றுக் கொண்டவனாக இருந்தால் மட்டுமே அவன் உலகப் பற்றாளனாக இருக்க முடியும் என்று அண்ணல் எடுத்துரைத்தார்.

வலிமை மிக்க,​​ வளமையான பாரதம் என்பது அவரின் லட்சியமாகவும்,​​ உலக சமாதானம் என்பது அவரது இலக்காகவும் இருந்தது.​ ​ ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,​​ காந்தியின் எழுத்துகளைப் பற்றி குறிப்பிடுகின்றபோது,​​ ""காந்தி,​​ இந்தியாவுக்காக மட்டும் எழுதவில்லை,​​ அவர் உலகத்துக்காகவும் எழுதுகிறார்'' என்று குறிப்பிட்டார்.

அண்ணல் காந்தி தெரிவித்த ஒவ்வொரு கருத்தும்,​​ அவர் நமக்களித்த செய்திகளும் புறத்தூய்மையோடும்,​​ அகத்தூய்மையோடும் அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் அன்றைய இந்திய சூழலுக்கும் ஏற்புடைய கருத்துகளாய் இருக்கும்.​ ஆகவேதான் 1921-ம் ஆண்டில் தான் மரணமடைவதற்கு முன்னரே,​​

"முடிவில்லா கீர்த்தி பெற்றாய் ​

புவிக்குள்ளே முதன்மையுற்றாய்''

என்று அண்ணல் காந்தியைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை சாசனமாகப் பதிவு செய்து விட்டுச் சென்றார் மகாகவி பாரதியார்.

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

முதல் பாகம்

பிறப்பும் தாய் தந்தையரும்

காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது, அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.

ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி, ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி, இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.

ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர், சத்திய சீலர், தீரமானவர், தயாளமுள்ளவர் ஆனால், கொஞ்சம் முன் கோபி அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக்காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர் சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்துவிடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.

அனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம். அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும் அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூiஜ செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.

என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூiஜயை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த்தரிசித்துவிட்டு வருவது. ஓரு தடவையேனும் சாதூர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விதத்தின் பேது சூரியதரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தூமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான் அதைப்பற்றிப் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.

என் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

இந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுரப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைக்கவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றம் யூகிக்க முடிகிறது.

குழந்தைப் பருவம்

எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக் மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமிலலை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டது வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.

உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப்பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்கா அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில் , என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசியரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். ஏன்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.

அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் ) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்தேன் படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்து என் நினைவில் இன்னும் அப்படியே என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.

மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள் ? அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது ? என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்தரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருவாகிவிடும் என்பது நிச்சயம்.

குழந்தை மணம்

இந்த அத்தியாயத்தை நான் எழுத நேர்ந்திருக்கக்கூடாது என்றே விரும்புவேன். இந்த வரலாற்றைக் கூறி முடிப்பதற்குள் கசப்பானவை பலவற்றை நான் விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அறிவேன். நான் சத்தியத்தை வழிபடுவனாக இருப்பதென்றால், வேறு விதமாக நடந்து கொள்ளுவதில்லை. எனது பதிமூன்றாவது வயதில் எனக்கு மணமாயிற்று என்பதைத் கூறியாக வேண்டியது. வேதனையோடு கூடிய என் கடமையாகிறது. என்னை சுற்றியலும் என் பராமரிப்பில் இருக்கும் அதே வயதுடைய சிறுவர்களைப் பார்த்துவிட்டு என் விவாகத்தையும் எண்ணும் போது என்னைப் பற்றி நானே பரிதாபப்பட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. என் கதிக்கு ஆளாகிவிடாமல் தப்பிவிட்ட அவர்களை ஆசீர்வதிக்கவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் இருப்பதாக நான் காணவில்லை.

எனக்கு ஆனது விவாகம் அன்றி நிச்சயதார்த்தம் அன்று என்பதை வாசகர்கள் தௌளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கத்தியவாரில் நிச்சயதார்தம் , விவாகம் என்ற இரண்டு வௌவேறு சடங்குகள் உண்டு. நிச்சயதார்த்தம் என்பது ஒரு பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் விவாகம் செய்வதென்று அவ்விருவரின் பெற்றோர்களும் ஆரம்ப நிச்சயம் செய்து கொள்வது. அது மீறிவிட முடியாதது அல்ல. பையன் இறந்து விட்டால் பெண் விதவை ஆகிவிடுவதும் இல்லை. பெற்றோரைப் பொறுத்தவரை செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமே இது. குழந்தைகளுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது. என்பதை அநேகமாக அக் குழந்தைகளுக்கு அறிவிப்பதும் இல்லை. எனக்குத் தெரியாமலேயே எனக்கு மும்முறை நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்று தெரிகிறது. எனக்கு என்று நிச்சயம் செய்திருந்த இரு பெண்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர் என்பதை அறிந்தேன். எனது ஏழாவது வயதில் மூன்றாவது நிச்சயதார்த்தம் நடந்ததாக இலேசாக நினைவிருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எனக்கு யாரும் தெரிவித்திருந்ததாக நினைவு இல்லை. இந்த அத்தியாயத்தில் என் விவாகத்தைப் பற்றியே நான் கூறுகிறேன். அதைப்பற்றிய ஞாபகம் எனக்குத் தெளிவாக இருக்கிறது.

நாங்கள் சகோதரர்கள் மூவர் என்பது நினைவிருக்கும். மூத்தவருக்கு முன்னாலேயே மணம் ஆகிவிட்டது. அடுத்த சகோதரர் எனக்கு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர். இந்த இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், எனக்கு ஒரு வயது மூத்தவரான பெரியப்பா பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் மணம் முடித்து விடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையைக் குறித்தோ, எங்கள் விருப்பத்தைப் பற்றியோ அவர்களுக்குச் சிந்தனையே இல்லை. அவர்கள் சௌகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரம் பற்றி விஷயம் அது.

ஹிந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே தங்களுக்கு நாசத்தைத் தேடிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சொத்தையும் வீணாக்குகிறார்கள், காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. விருந்துப் பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும் வகையிலும், ஒவ்வொரு வரும் மற்றவரை மிஞ்சிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்குக் குரல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஏகக் பெண்களுக்குக் குரல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டுப் பாடுகிறார்கள். நோய் வாய்ப்படவும் செய்கிறார்கள், அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாத படியும் செய.து விடுகிறார்கள். இத்தகைய கூச்சல், குழப்பங்களையும் விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பையையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில், தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ளவேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்தத் தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்த போவது எவ்வளவோ, நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர். இப்படிச் செய்தால் செலவும் குறைவாக இருக்கும் ஆடம்பரமும் அதிகமாயிருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்குப் பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாகச் செலவிடலாம். ஏன் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகிவிட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்க வேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள் தங்கள் கடைசிக்காலத்தில் சந்தோஷமான காரியத்தைச் செய்துவிட்டுப் போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் முன்னிட்டு மூன்று விவாகங்களையும் ஒரே சமயத்தில் முடித்துவிடுவது என்று முடிவு செய்தனர். நான் முன்பே கூறியிருப்பதைப்போல, இவற்றிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு மாதங்கள் பல ஆயின.

இத்தகைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்த பிறகே, நடைபெற இருக்கும் சம்பவங்களைப்பற்றி நாங்கள் அறியலானோம். உடுத்துக்கொள்ள நல்ல ஆடைகள் கிடைக்கும், மேளதாளங்கள் இருக்கும். கல்யாண ஊர்வலங்கள் இருக்கும், பிரமாதமான விருந்து நடக்கும், இவற்றுடன், சேர்ந்த விளையாடுவதற்கு விசித்திரப் பெண் ஒருத்தியும் கிடைப்பாள் என்பதைத்தவிர, விவாகம் என்பதைப்பற்றி எனக்கு அப்பொழுது வேறோன்றுமே தெரியாது. சிற்றின்ப இச்சை பிறகுதான் ஏற்பட்டது. குறிப்பிடக்கூடிய சில விவகாரங்களைத் தவிர நான் வெட்கப்பட வேண்டிய பிறவற்றை மறைத்துவிடவே விரும்புகின்றேன். இந்த விவரங்களைப் பிற்பாடு சொல்லுகிறேன். ஆனால், இவற்றிற்கும், இந்தக்கதையை நான் எழுதுவதன் முக்கியமான நோக்கத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமிலலை.

ஆகவே, என் அண்ணனையும் என்னையும் ராஜகோட்டிலிருந்து போர்பந்தருக்கு அழைத்துச் சென்றனர். முடிவான நாடகத்துக்குப் பூர்வாங்கமாக எங்கள உடம்பெல்லாம் அரைத்த மஞ்சளைப் பூசியது போன்ற சில வேடிக்கையான விவரங்களும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதுதான்.

என் தந்தையார் ஒரு திவான். ஆனாலும் ஓர் ஊழியர்தான். அவரிடம் தாகூர் சாஹிப் விசேஷ அபிமானம் வைத்திருந்ததனால் அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே ஊழியம் புரிந்தார். தாகூர் சாஹிப் கடைசி நிமிஷம் வரையிலும் என் தந்தையாரைப் போக விடவில்லை. போக அனுமதித்தபோது பிரயாண காலத்தில் இரண்டு தினங்கள் குறைவதற்காக, விசேஷக் குதிரை வண்டிகளை என் தந்தைக்கு ஏற்பாடு செய்ய அவர் உத்தர விட்டார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்து விட்டது. ராஜகோட்டிலிருந்து போர் பந்தருக்கு 120 மைல்கள். சாதாரண வண்டியில் வந்தால் ஐந்து நாட்கள் ஆகும். என் தந்தையோ மூன்றே நாட்களில் வந்துவிட்டார். ஆனால் மூன்றாவது கட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் வந்த குதிரை வண்டி குடை சாய்ந்தது. அவர் பலத்த காயமடைந்தார்., காயங்களுக்காக, உடம்பெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். நடைபெறவிருக்கும் வைபவத்தில் அவருக்கும் எங்களுக்கும் இருந்திருக்க வேண்டிய சிரத்தையில் பாதி இதனால் போய்விட்டது. ஆயினும் எப்படியும் வைபவம் நடந்தாக வேண்டும் முகூர்த்தத் தேதிகளை மாற்ற முடியுமா ? குழந்தைகளுக்குக் கல்யாணத்தில் இயல்பாக ஏற்படும் சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டிருந்தது. அதில் மூழ்கியதன் காரணமாக, என் தந்தையின் காயங்களால் அடைந்த மனக்கிலேசத்தை மறந்திருந்தேன்.

என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. அதே அளவுக்குச் சதை உணர்ச்சிகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. என் பெற்றோருக்கு நான் ஆற்ற வேண்டிய பக்தியோடு கூடிய பணிக்காக எல்லாச் சுகங்களையும், இன்பங்களையும் நான் தியாகம் செய்துவிட வேண்டும் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. எனினும், இன்ப நுகர்ச்சியில் நான் கொண்டிருந்த ஆசைக்குத் தண்டனையாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுதிலிருந்து அந்தச் சம்பவம் என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன். ஆசைகளைத் துறக்காமல் ஆசைக்குரிய பொருள்களைத் துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும் அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். இப்பாடலை நான் பாடும்போதெல்லாம், பாடக் கேட்கும் போதெல்லாம். வெறுக்கத்தக்க கசப்பான அந்தச் சம்பவம் உடனே என நினைவுக்கு வந்து, வெட்கப்படும்படி செய்கிறது.

என் தந்தைக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தும், சமாளித்துக் கொண்டு தைரியமாகவே காணப்பட்டார். மண வைபவங்களிலும் கலந்து கொண்டார். பல தரப்பட்ட சடங்குகளில் அவர் கலந்து கொண்டபோது, எந்த எந்த இடங்களில் உட்கார்ந்திருந்தார் என்பதைக்கூட இன்றும் என் மனக்கண் முன்பு கொண்டுவர முடியும். நான் குழந்தையா இருந்தபோதே எனக்கு விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது ஒரு நாள் நான் என் தந்தையைக் கடுமையாகக் குறை கூறுவேன் என்று அப்பொழுது நான் கனவிலும் எண்ணவில்லை. அன்று நடைபெற்றவையாவும் சரியானவை, நியாயமானவை, மகிழ்ச்சிகரமானவை என்றே அந்த நாளில் எனக்குத் தோன்றியது.

விவாகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கே இருந்தது. என் தந்தை செய்வன எல்லாம் சரியான காரியமாகவே அப்பொழுது எனக்குத் தோன்றியதால் அவற்றைப்பற்றிய நினைவு என் ஞாபகத்தில் அப்படியே இருந்து வருகின்றது. மணவறையில் நாங்கள் எவ்விதம் அமர்ந்திருந்தோம், சப்தபதிச் சடங்குகளை எவ்விதம் நிறைவேற்றினோம், புதிதாக மணமான கணவனும் மனைவியும் இனிப்பு கன்ஸாரை எவ்விதம் ஒருவருக்கொருவர் வாயில் ஊட்டிக் கொண்டோம். நாங்கள் இருவரும் எவ்விதம் கூடி வாழத் தலைப்பட்டோம் என்பனவற்றையெல்லாம் இன்றுகூட என் உள்ளத்தில் நினைத்துப் பார்க்க முடியும்.

மேலும் அந்த முதல் இரவு * எதுவுமே அறியாத இரு குழந்தைகள், எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்கைச் சாகரத்தில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி என் அண்ணன் மனைவி எனக்கு தயார் செய்திருந்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி அவளை நான் கேட்டதே இல்லை, இப்பொழுது கேட்கும் உத்தேசமும் இல்லை. ஒருவரையொருவர் சந்திப்பதில் எங்களுக்கு ஒரே நடுக்கந்தான். இதனைப்பற்றி வாசகர்களுக்குச் சந்தேகமே தேவையில்லை. உண்மையிலேயே எங்களுக்கு அளவு கடந்த கூச்சம். அவளுடன் நான் எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது ? சொல்லிக் கொடுத்திருந்த பாடம் அந்த அளவுக்கு உதவவில்லை. ஆனால், இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்தவிதமான போதனையுமே அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான போதனைகளும் அனாவசியமானவை என்று ஆக்கிவிடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன்.

கணவன் அதிகாரம்

எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் ( எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை ) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும். அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை மறந்துவிடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப்பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யத் சந்தர்ப்பமும் கிடையாது.

ஆனால் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால் எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவதென்றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு, அவளுடைய கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக் கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான் விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித்தேன். அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ஆனால், காரணங்களுக்காகச் சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை.

ஆகவே, அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என் அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத்தண்டனையே, இத்தகைய காரியத்திற்கு உடன் பட்டுவிடக் கூடிய பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க் கொண்டுதான் இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால் எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. குழந்தைத் தம்பதிகளான எங்களுக்குள், ஒருவரோடடொருவர் பேசாமல் இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. என்னுடைய கட்டுத் தி;ட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறுமில்லை என்றே நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது என்றும், தன் தோழிகளைப் போய் பார்க்க கூடாது என்றும் தடைவிதித்தால், கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள் ? அவளுக்குக் கட்டுத் திட்டங்களை யெல்லாம் விதிக்க எனக்கு உரிமை இருக்கிறதென்றால், அதே போன்ற உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா ? இவையெல்லாம் இன்று எனக்குத் தெளிவாகப் புரிகின்றன. ஆனால் அப்பொழுதோ கணவனுக்குரிய அதிகாரங்களைச் செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன் *