சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் சாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் கேரளத்திலும் கேரளத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இன்றைய தமிழகத்தின் குமரி மாவட்டம் பகுதியிலும் மக்களுக்கான மாபெரும் போராளிகள் உருவானார்கள். அவர்கள் அய்யன்காளி, நாராயண குரு மற்றும் வைகுண்ட சாமி என்னும் முத்துக்குட்டி சாமிகள். இவர்களில் காலத்தால் மூத்த, மிகப் பெரிய விழுப்புண்கள் பெற்ற சமூகப் போராளியான வைகுண்டரை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அக்காலங்களில் கேரளம், 1050 சாதிகள் கொண்டதாக, பிராமணர்களிடையே உயர்ந்தவர்-களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்யமுடியாத அளவுக்குச் சாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.

எந்தச் சாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த சாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த சாதி. நாடார்களும் ஈழவர்களும் மது தயாரிப்பில் இருப்பதால் தாழ்ந்த சாதி. புலையர்கள் தாழ்ந்த சாதியிலும் தாழ்ந்த சாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.

நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக் கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண்டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும்ந் நிற்கவேண்டும். இப்படியே 1050 சாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரி¬யைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்தவேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக்கும் வரி.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மையத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்துகொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்கும், தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.

இவ்வளம் தாழக் கிடப்பாரைக் கைதூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.

1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, ஐரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சி சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, சாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றமும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.

1906-ல் மகராசன் வேதமாணிக்கம் என்கிற சீர்திருத்த கிறிஸ்தவரே சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை இந்தப் பகுதியில் கொண்டு வந்தார். ரிங்கல் துவ்பே, மீட் ஐயர், அவரது மனைவி ஆகியோர் குமரி மாவட்டதுக் கல்வி வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கியக் காரணிகளாக இருந்தார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் தங்களை பிணைத்துக் கொண்டு கல்வி கற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் நாடார்கள். கிறிஸ்தவத்துக்குள் வந்த நாடார் ஆண்களும் பெண்களும் ஆடை அணிந்து ஞாயிறு பூசைக்கு வரும் சூழலை ஏற்படுத்தியவர் ரிங்கல் துவ்பே. கிறிஸ்தவ நாடார்களுக்குக் கிடைத்த இந்த உரிமையை இந்து நாடார்களும் ஏற்று, இந்து நாடார் பெண்கள் தங்கள் மார்பை ஆடையால் மூடி வெளியே புழங்கத் தொடங்கினார்கள். இது, நாயர் மற்றும் மேல் சாதியினர் கண்களை உறுத்தியது. விளைவாகப் பெரும் கலவரம் மூண்டது. சுமார் 30-40 ஆண்டுகள் இந்தக் கலகம் நீடித்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடத்தில், தெருக்களில் மானப்பங்கப்-படுத்தப்பட்டார்கள். வரலாற்றில் இதுவே தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. (தோள் சீலை-தோளை மூடும் சேலை, ரவிக்கை) தோள் சீலை போராட்டத்தைப் பிறகு பார்க்கலாம்.

இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.

வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மைலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத்தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது.- இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது. அவருடைய 22-ம் வயதில் கடுமையான நோய் கண்டு, மரணத்தை எட்டிப் பார்த்திருக்கிறார். வேண்டுதலாக அவரது தாயாரும் உறவினர்களும், அவரைத் தொட்டில் கட்டித் திருச்செந்தூருக்குத் தூக்கிச் சென்றார்கள். திருச்செந்தூரில், தன் எதிர்காலம், ஆற்ற வேண்டிய பணி பற்றிச் சிந்தித்து, ஒரு முடிவோடு திரும்பி இருக்கிறார். அவர் வாழ்வில் இதை அற்புதம் என்பார்கள். மூன்று நாட்கள் காணாமல் போயிருந்து, தெளிந்த முடிவோடு திரும்பி வந்திருக்கிறார் அவர்.

அடுத்த ஆறு ஆண்டுகள் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் 1840-ல் தன் 32-ம் வயதில் சேவை, தொண்டு, கலக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் அவர். மக்களுக்கு இரண்டு எதிரிகளை இனம் காட்டினார். ஒருவர் வெண்ணீசன் என்கிற கிறிஸ்தவ, வெள்ளைக்காரர்கள். கலிநீசன் என்ற ஆண்ட அரசனைக் குறிப்பிடுகிறார். வைகுண்டர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. ஆனால், இந்து மதம், அவரையும் அவரது மக்களையும் புறம் தள்ளியது. அந்த இந்து மதத்தின் கடவுள்கள் அவரையும், அவருடைய மக்களையும் தம் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், அவர் தன்னை இந்துவாகவும், நாடாராகவும், ஒருபோதும் கருதியதில்லை என்பதே அவர் சிறப்பு. தனக்கென்று தாழ்ந்து கிடக்கும் மக்கள் அனைவருக்குமாக ஒரு புது வழியைக் கண்டார். அதன் பெயர் அன்பு வழி இயக்கம். அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட பதினெட்டு தாழ்த்தப்பட்ட சாதியர்க்கும் ஆன இயக்கம் அது. இதைப் பின்னாளில் ‘அய்யா வழி’ என்று குறிப்பிட்டார்கள். இந்துமதக் கடவுளான விஷ்ணுவை அவர் துதித்தார். அந்த விஷ்ணு அன்பு மயமான, வைகுண்ட வாசன். எல்லாச் சாதிக்கும் பொதுவான ஈசர்.

அந்தக் காலத்தில் பொதுக்-கிணற்றில் எல்லாச் சாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்துச் சாதியரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் சாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன--. வைகுண்டர், இந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை சாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட சாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகை கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்யவேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப்பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்-களில். இன்றும்கூட பல கோயில்-களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடிமுன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி சாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன்போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்கா தீங்கோ’ என்றார் அவர்.

வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...


Thanks to,
\பிரபஞ்சன்

Best Blogger Gadgets

6 கருத்துகள் :

Suresh Kumar சொன்னது…

நல்ல வரலாற்று கருத்துக்கள் தொடருங்கள்

Sankar Gurusamy சொன்னது…

Very Good Life Story of Ayyaa... Thanks for sharing... Pls visit

http://anubhudhi.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான ஒரு ஞானியை பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பாடு

Velmaheshk சொன்னது…

Suresh Kumar said...
நல்ல வரலாற்று கருத்துக்கள் தொடருங்கள்

நன்றி

Velmaheshk சொன்னது…

சங்கர் குருசாமி said...
Very Good Life Story of Ayyaa... Thanks for sharing... Pls visit

http://anubhudhi.blogspot.com/


நன்றி சங்கர் குருசாமி

Velmaheshk சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
மிக அருமையான ஒரு ஞானியை பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பாடு

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

கருத்துரையிடுக