இப்படியும் பாடல் எழுத முடியுமா! -தமிழின் ஒரு விந்தை

இப்படியும் பாடல் எழுத முடியுமா!
-தமிழின் ஒரு விந்தை

தமிழில் இருக்கும் விந்தைகள் ஏராளம்! அவற்றில் ஒன்றை இங்கு காண்போம்!
அருணகிரிநாதரின் வரலாற்றில் நிகழ்ந்தது இது! வில்லிப்புத்தூரார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் மற்ற புலவர்களை வாதுக்கு அழைத்து, தோற்றால், தோற்றவர்களின் காதை வென்றவர் அறுத்து விடவேண்டும் என்று ஒட்டம் (பந்தயம்) கட்டிப், பலரையும் வென்று, காதுகளை அறுத்துக் கொண்டிருந்தார். இதற்கென்றே தம் கையில், நீளமான ஒரு துரட்டியையும் வைத்திருந்தார். அதன் ஒரு நுனியில், காதை அறுக்கப் பதமான வளைந்த கத்தி இருக்கும். வாதிட வரும் புலவர் வாதில் தோற்றால், உடனே துரட்டியால் அவர் காதை எட்டிப் பிடித்து இழுத்து அறுத்து விடுவார். இதனால் புலவர்கள் பலர், அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். இந்தக் கொடுமையை அறிந்த அருணகிரிநாதர், புலவர்களைக் காப்பாற்ற நோக்கம் கொண்டார். ஆகவே, தானே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். வாதம் தொடங்கியது.

இருவருமே புலமையில் சிறந்தவர்கள் என்பதால், இவர் பாடலுக்கு அவர் பொருள் கூறுவதும், அவர் வாதத்துக்கு இவர் விடை கூறுவதுமாக, இருவருக்கும் தோல்வியின்றி வாதம் நீண்டது. வாதத்தை வளர்த்துச் செல்ல விரும்பாத அருணகிரி, கடைசியில் விந்தையான ஒரு பாடலைப் பாடி, அதன் பொருளைக் கூறுமாறு கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப் போய் அமர்ந்து விட்டார். அந்தப் பாடலுக்கு, அவருக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை!

அஃது ஒரு ‘தகரவகை’ப் பாடல். முழுக்க முழுக்கத், ‘த’ எழுத்தின் வரிசை எழுத்துக்களாலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். வடமொழியிலும் தெலுங்கிலும் கூட இவ்வகைப் பாடல்கள் உண்டு. ‘ஏகாட்சரப் பாடல்’ என்று சொல்வார்கள். தமிழில் ககரவகை, தகரவகை ஆகியவற்றில் இவ்விதப் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.
வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியாரோ, அது தம்முடைய நோக்கமில்லை என்றும் புலவர்களுக்கு இவ்வாறு கொடுமை செய்வதை வில்லியார் நிறுத்தினால் போதும் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூராரும், அருணகிரிநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தாம் இனி அறவழியில் மட்டும் தமிழை வளர்க்கப் பாடுபடுவதாக உறுதி அளித்தார். பின்னாட்களில் அவர், தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல், அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”


இதன் பொருளைத் திருமுருகக்.கிருபாநந்தவாரியார், இவ்வாறு கூறுகிறார்.

திதத்தத் தத்தித்த – ‘திதத்தத் தத்தித்த’ என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – பெருங்கடலைப் பாயாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதேயென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப வடிவமான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்குத்
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – ஏழு தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – இறப்போடும்
உதி – பிறப்போடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாக வேண்டும்
இப்பாடல், கந்தர் அந்தாதியின் 54ஆவது பாடல். இதில் ‘திதத்தத்தத்’ என்பது, நான்கு அடிகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதனை ‘மடக்கு’ எனவும் ‘யமகம்’ எனவும் சொல்வார்கள். முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்த பாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவேதான் அக்காப்பிய வகைக்கு, ‘அந்தாதி’ எனப் பெயர். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்து கொள்ள வேண்டியவை இருக்கின்றன.


நன்றி: தமிழ் தந்த சித்தர்கள் (முகநூல்).

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக