தோபா சுவாமிகள் சரிதம்



திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.

தோபாசுவாமிகளின் தோற்றம்:


அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.

தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:

பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.\
இந்த இராமலிங்கச் சிறுவரின் நிலையைக்கண்ட ஆங்கில அரசு தம் காலாட் படையில் சேர்த்து கொண்டது. இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இருந்தது. ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6.00 மணி முதல் ஒரு மணிநேரம் வரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் பிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.
பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீர்ர்கள் வெளியில் சென்று வருவார்கள் ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தபோதும் அவர் வெளியில் செல்வதே இல்லை பணிமுடிந்தவுடன் படைவீரர்கள் தங்கும் இடத்திலேயே இறை சிந்தையோடு நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல அவருடைய தவக்காலமும் அதிகரித்தது.
படைவீர்ர்கள் தங்கும் இடத்தை மேற்பார்வையிட தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள் சிறிது நாட்களுக்கு பிறகு சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6.00 மணிக்கெல்லாம் படைப்பயிற்சித் திடலுக்கு முறைப்படி வந்து விடுவதால் அவர் இரவு தியானம் செய்வதை ஒரு குறையாகவே எடுத்துகொள்ளவில்லை. அதுபற்றி காவலர்கள் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.
இப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் படைப்பிரிவின் மேலதிகாரி படைவீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நுழைந்தார், எல்லோரும் பயிற்சித் திடலுக்கு சென்றிருந்த போது சாமி மட்டும் அவர் தம் இருப்பிடத்திலே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இருப்பினும் அவர் சுவாமியின் தவத்தைக் கலைக்காமல் படைப்பயிற்சித் திடலுக்கு வந்தார் அங்கு வந்த மேலதிகாரி அதிசயத்தக்க வகையில் சாமி அவர்கள் முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார்.
உடனே மேலதிகாரி இந்தப் படைவீரர் ஒரு மகா சித்தர் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டு சென்று விட்டார். இதன் பின்னர் சுவாமி அவர்கள் தன் படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக (ஆடை இல்லாமல்) வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையச் சுற்றியிள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்துகொண்டிருந்தார்.

தோபா சித்தர் பெயர்காரணம்:

நம்முடை தோபாசித்தர் அவர்கள் திருஞானசம்பந்தப் பெருமானை மானசீக குருவாக கொண்டவர். அவர்தம் முதல் பதிகமான தோடுடைய செவியன் பதிகம் மீது மிகவும் காதல் கொண்டவர் இந்த பாடலை அவர் கேட்டவுடன் தன் நிலை மறந்து வீற்றிருப்பார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த பகுதியில் வாழும் சிறுவர்கள், சுவாமி அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள். அச் சிறுவர்களை சுவாமி அவர்கள் தோடுடைய செவியன் என்ற பாடலை பாடுங்கள் என்று கேட்பார் உடணே பாடுவார்கள்.
இவ்வாறு பல நாள் தொடர்ந்து நடந்தது கொஞ்ச நாட்களுக்கு பிறகு அச் சிறுவர்களை பார்த்து தோ பா என்றார் ‘தோ’ என்பது தோடுடைய செவியன் என்ற பாடலையும் ‘பா’ என்ற எழுத்து பாடுங்கள் என்பதையும் குறிக்கும். தோ பா என்ற உடனேயே சிறுவர்கள் பாடத் தொடங்கி விடுவார்கள், இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் ‘தோபாசாமி’ என்று அழைத்தனர்.

 

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் 
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

 

தோபாசுவாமிகளும் வடலூர் வள்ளல் பெருமானும்:

சென்னையில் பல சித்துகள் புரிந்த சுவாமி அவர்கள் சென்னையில் உள்ள திருவொற்றியூரில், நம் தோபா சுவாமிகள் ஒரு நாள் தெருவோரம் அமர்ந்து இருந்தார். அந்த தெருவில் போவோர் வருவோரைப்பார்த்து அவரவர் குணங்களுக்கேற்ப நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, பேய் திரிகிறது எனப் பகர்ந்தவண்னமிருந்தார்.
அந்நேரத்தில் வடலூர் வள்ளல் அவர்கள் அத்தெருவழியாக வரவே; மனிதர் வருகிறார் என்றார். இதனைக் கேட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சிலர் இவர் ஒரு பைத்தியம் எனக் கூறினார். ஆனால் வள்ளல் பெருமான் இவரின் நிலை உணர்ந்தார் இவரும் யாமும் ஒத்த நிலையுடையோம் இவர் திக்கு ஆடையினார்; யாம் வெண்ணிற ஆடையினோம், இதுவே வேறுபாடு எனக்கூறி நமது தோபா சாமிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிரிவாற்றாது நீங்கிப் போனார்.

தோபாசுவாமிகள் வேலூர் வருகை:

சென்னையில் இருந்த சுவாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையை விட்டு வெளியேற முற்பட்டார் அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர், குதிரைவண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார் அதன் பிறகு சாமி வேறு எங்கும் செல்லவில்லை வேலூரிலேயே சுமார் 12 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்துகொண்டு வந்தார்.

சுவாமிகளின் ஒடுக்க நிலை:

இவ்வாறாக நமது தோபா சுவாமிகள் தன்னுடைய குருநாதரான திருஞானசம்பந்த பெருமான் அருளால் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தும். தம்மைச் சரணடைந்த சீடர்களுக்கு ஞானம் வழங்கும் ஒர் அற்புத துறவுச் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
அருட்தந்தையாக வாழ்ந்த நமது தோபா சுவாமி அவர்கள் கி.பி.1850 ஆம் ஆண்டு சாதாரண வருடம் பங்குனி திங்கள் இருபத்தி ஏழாம் நாள் புதன்கிழமை பூர்பவட்சம் பிரதமை திதி இரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஒடுக்க நிலை நின்றார்.
வேலூர் மக்கள் இன்றும் அவரைத் தெய்வமாகக் கருதி அவர் சமாதியில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் குரு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த மடாலயத்தில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.


தோபாசாமி மடலாயம் இருக்கும் இடம் வேலூர் சைதாப்பேட்டை

கருத்துரை

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக