நாகர்கோவில் நண்பர்கள் - 2






கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.












நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.



by யோகேஸ்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக