நாகர்கோவில் நண்பர்கள் - 1

நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி, கல்லூரி நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் இப்பொழுது சொல்லப்போவது என்னுடைய நாகர்கோவில் நண்பர்களைப் பற்றித் தான்.


நாகர்கோவில் என்றொரு ஊர் உண்டு அங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது தான் தெரியும். விடுதியில் தங்கிப்படிக்கும் போது என் அறைத் தோழர்கள் மனோ மற்றும் மைக்கேல். இவர்கள் தமிழகத்தின் தென் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டக்காரர்கள். முதன் முதலில் தமிழை வித்தியாசமாகப் பேசக் கேட்டது இவர்களிடம் தான். இளங்கலை அருப்புக்கோட்டையில் படித்ததால் எல்லோரும் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்துதான் வந்திருந்தோம். எனவே அங்கு வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக் கேட்க முடியவில்லை.

நாகர்கோவில்காரர்கள் வெப்பத்தைத் தாங்கமுடியாதவர்கள். மைக்கேல் எப்போதும் நீர்யானை மாதிரி தண்ணீரில் ஊறுவான். இரண்டு முறை குளிப்பது, ஸ்டடி அவரில் பத்து தடவை பாத்ரூமுக்குப் போய் தண்ணில் விளையாண்டுட்டு வருவது அலும்புவான். கேட்டால் "ஒரே சூடு மக்கா!" என்பான். இவர்கள் தமிழை மலையாளம் கலந்து பேசுவார்கள். அநியாயத்துக்கு ஊர்ப்பெருமை பேசுவார்கள்.

இவர்களையும் வாழைப்பழத்தையும் பிரிக்க முடியாது. ஒரு நாள் கல்லூரி எதிரில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்து கொண்டு "மக்கா, இங்க என்ன பழம் கிடைக்குது? எங்க ஊருல எல்லாம் வகைவகையாக் கிடைக்கும். கேட்டியா?" என்றான். "எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாட்டுப்பழம், ரஸ்தாளி, பூவன் பழம், பச்சைப்பழம் மட்டும் தான். வாழைப்பழத்துல கூட உங்க ஊர் முன்னால இருக்காடா?"ன்னேன். "ஆமா கேளு" ன்னு ஒரு லிஸ்ட்டே சொன்னான்.

"யாத்தம்பழம்
ரசகதளி
மாவுகதளி
பாளையங்கொட்டை
செந்துளுவன்
மோரிஸ்
மட்டி
சிங்கன்
பேயன்பழம்
வெள்ளைத்துளுவன்
மொந்தம்பழம்
கற்பகவள்ளி
பூங்கதளி"


அசந்துட்டேன். "அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம். இப்பப்பாரு ஒரு மேஜிக். இந்தப் பழத்தோட நுனியில விரலை வச்சு அமுக்குனா பழம் மூணாப் பிரியும் பாரு"ன்னுட்டு அமுக்கிக் காட்டினான் பழம் மூன்றாகப் பிரிந்தது. "அட! வாழைப்பழத்துல இவ்வளவு விசயம் இருக்கா?"ன்னு வாயைப் பிளந்தேன். "எல்லாம் எங்க ஊருல கத்துக்கிட்டது மக்கா!"ன்னான்.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பாலும் கிறித்தவர்கள் நிறைந்த பகுதி. எல்லோரும் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் ஆசிரியர் பணியிலும், அரசு வேலையிலும் இருப்பவர்கள். எனவே பிள்ளைகளின் கையில் தாராளமாகப் பணம் புரளும். எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக அசையாத சொத்து இருக்குமாம். மைக்கேல், மனோவுக்கு இரப்பர் தோட்டம் இருக்கிறதாம்.

இவர்கள் பேசும் சில தமிழ் வார்த்தைகள் நமக்கு வித்தியாசமாகத் தெரியும்.
கருக்கு - இளநீர்
தூத்துதல் - வீட்டைப் பெருக்குதல்
சவட்டீருவேன் - மிதிப்பேன்
நாசம் ஆயிரும் - வீணாகிவிடும்
தொட்டெடுத்து - பக்கத்தில்

அப்புறம் எல்லா வாக்கியத்திலும் 'கேட்டியா?' என்று கடைசியாக சேர்த்துக் கொள்வார்கள். "மக்கா! இந்த ஊர் ரொம்ப மோசம் கேட்டியா?" இப்படி. இவர்கள் ஊரிலெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே கிடையாதாம். எனக்கு ஒரே பொறாமை. இருக்காதே பின்னே. நானெல்லாம் ஒரு குடம் தண்ணீரை அடிபம்பில் அடித்து அதிலே குளித்த ஆளு.


மலையாளத் திரைப்படத்தைப் பற்றி விவரமாக அலசி ஆராய்வார்கள். நமக்கு கொட்டாவி வரும். மோகன்லாலை மிகவும் புகழ்ந்து பேசுவார்கள்.


அடுத்து இந்த மக்களிடம் முக்கியமானது இவர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சணை.


((அடுத்த பதிவில் சொல்லுறேன்))


பி.கு: நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். அப்படி எதாவது தப்பா இருந்தா அது எங்க ஊரிலெல்லாம் அந்த மாதிரி இல்லையே என்று எனக்கு வந்த பொறாமையே காரணமாயிருக்கும்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக