Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்

சுடலைமாடன் கதை:- உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார். உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்.. "ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன். "தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை.. "அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன். "இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது" "ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்" "இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்.. அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது.. இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது.. "இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்.. ஈசனோ கடுங்கோபம் கொண்டார்.. "நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்) மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்.. "இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்.. "நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்.. மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்.. அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார். அவள் சாபத்தை நீக்கினார்... "தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்.. ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள். பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்... அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்... பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள். அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை.. ஓர் நாள்.. நடுசாமம்.. பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள். நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது.. சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று.. தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்... தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான். அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்.. தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்.. வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்.. ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார். "மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார். தந்தை பரமனார் தன்னைக் கைலாயத்தை விட்டுப் போ என்று சொன்னவுடன் மகன் சுடலை திகைத்தான்.. "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்து பேர்கொடுத்த நீங்களே போகச்சொன்ன பிறகு நான் என்ன செய்வேன்...? நான் போகிறேன்.. எனக்குக் கொடை கொடுத்து வரமளிக்க வேண்டும்" என்றான்.. சுடலைக்கு அப்போது வயது ஐந்து.. "உனக்கு எப்படிப் பட்ட கொடை வேண்டும்?" என்று ஈசனார் கேட்டார். "எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் எனக்குப் படையல் இட வேண்டும். ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கல் அரிசி சோறும், ஒரு பரணில் சூலி ஆடுகளும், ஒரு பரணில் சூலி எருமைகளும், ஒரு பரணில் சூலி பன்றிகளுமாக, உயிர்ப்பலிகள் படையல் இடவேண்டும்."என்று கேட்டான். இதைக் கேட்டதும் கைலாயம் அதிர்ச்சியானது. சுத்த சைவக் கோட்டையான கைலாயத்தில் அசைவப் படையலா? அதுவும் ஈசனாரிடமே இவன் கேட்டு விட்டானே என்று அத்தனை தேவாதிதேவர்களும் மலைத்தனர். உமையவளுக்கோ தன் பிள்ளை இப்படிப் பிணந்திண்ணிப் பிள்ளையாகி விட்டானே என்ற வருத்தம். ஈசனும் இசைந்தார். சைவக்கோட்டையான கைலாயத்தில் அன்று மாடனுக்கு அசைவப் படையல். அதுவும் ஈசனே ஏற்பாடு செய்தது... தேவாதி தேவர்கள் முன்னிலையில் அத்தனைப் படையல்களையும் ஏற்றான். நடனமாடினான்... தேவமங்கைகளும் நடனமாடினர்... இறுதியில் ஈசனாரிடம் "இந்தப் பலிகள் எனக்குப் போதாது. எனக்கு நரபலி வேண்டும்" என்று கேட்டான்... ஈசனோ மௌனமாக தன் காலால் தரையைத் தேய்த்தார்.. அங்கே தேவகணியன் தோன்றினான்.. தன் மகுடத்தை இசைத்து மாடனை மகிழ்வித்தான்.. ஆடினான்.. அவன் ஆட்டத்தில் மயங்கினான் மாடன்... தன் கையைக் கிழித்தும், நாக்கைக் கிழித்தும் இரத்தத்தை மாடனுக்குப் பலியாகக் கொடுத்தான். அதையே நரபலியாக ஏற்ற மாடனும் ஈசனாரிடம் வந்து மீண்டும் வரம் கேட்டான்.. "ஓயாத பேய்களை அடக்கும் வரம் வேண்டும். தர்க்கம் செய்யும் பேய்களை நான் தடிகொண்டு ஓட்ட வேண்டும். நான் கொடுக்கும் மயான சாம்பலால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து போக வேண்டும். நல்லவர்கள் என்னைப் பணியாவிட்டாலும் அவர்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். கெட்டவர்கள் என் பாதம் பணிந்தாலும் அவர்களை நான் கருவறுக்க வரம் வேண்டும்" என்று சுடலை கேட்டான். மகன் சொல்லுக்கு தந்தையும் செவிமடுத்தார்.. "தந்தேன் மகனே... நீ செல்லலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார். ஈசனிடம் வரம் வாங்கிய நம் சுடலைமாடசுவாமி கயிலாயத்தின் தென்வாசல் வழியாக வெளியேறினார்..(வரம் வாங்கியவரை மரியாதையோடு அழைப்போம்). வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி வல்லவனாம் மாயன் சுடலையாண்டி பூலோகம் வந்து சேர்ந்தார். திருக்கேதாரம் தொடங்கி சிவாலயங்களில் சென்று வழிபாடு செய்தார். காசியின் புனித தீர்த்தங்களில் நீராடி வடநாட்டுப் புண்ணியதலங்களையெல்லாம் தரிசித்து விட்டு நம் தென்னாடு நோக்கி வந்தார் சுடலை ஈசன். தென்னாட்டில் காஞ்சியில் அய்யனையும் அம்மை காமாட்சியையும் கண்டு வணங்கினார். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையானையும், உண்ணாமுலையாளையும் வணங்கி அருள் பெற்றார். வேங்கடமலை சென்று திருவேங்கடநாதனையும் அன்னையையும் வழிபட்டார். இவ்வாறாக புண்ணிய தலங்கள் எல்லாம் சென்றுவழிபட்ட சுவாமி நம் பாண்டி மாதேசம் வந்து சேர்ந்தார். மதுரைமாநகரில் ஈசனால் ஏற்படுத்தப்பட்ட புண்ணியநதியாம் வைகையில் நீராடி சோமசுந்தரக் கடவுளையும், அன்னை மீனாட்சியையும் வணங்கினார். இவ்வாறாக சிவாலயங்கள் 1008ம் திருப்பதிகள் 108ம் தரிசனம் செய்த சுவாமி மலையாள தேசம் நோக்கி வந்தார். அங்கே குருவாயூர், திருவனந்தபுரம் என்ற புண்ணியதலங்களைத் தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரை என்ற ஊரை வந்தடைந்தார்... சுடலைமாட சுவாமி கொட்டாரக்கரை வந்து சேர்ந்த சமயத்தில் அங்கே கோயில் கொண்டிருந்த அன்னை பகவதிக்குத் திருவிழா... தேரோட்டம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.. தேரிலே சிம்மக் கொடியைக் கண்டதும் தன் தாய்க்குத்தான் திருவிழா நடக்கிறது என்று அறிந்த சுடலையாண்டவர் இவளிடம் அடைக்கலம் கேட்போம் என்று அவளை வணங்கி நின்றார்... தேரில் பவனி வந்த அன்னையோ சுடலைமாடனைக் கவனிக்கவில்லை. அமைதியாக இருந்தால் நம் அன்னை நம்மைக் கவனிக்க மாட்டாளென்று எண்ணி அட்டகாசம் செய்ய முடிவுசெய்தார். ஒரே பாய்ச்சலாக தேரில் பாய்ந்தார். தேரின் அச்சு முறிந்தது... தேரோட்டத்தைக் காணாமல் தேவதாசியின் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்த ஒருவனது தலையைப் பிடுங்கி எறிந்தார். அது தேவதாசியின் மேல் பட்டதால் அவளும் இறந்தாள்... அன்னைக்கு அன்றாடம் பூசைகள் செய்து வரும் அந்தணரை ஒரே அடி... அவரும் மிரண்டு அன்னையிடம் ஓடினார்... "தாயே பகவதி... அன்றாடம் உனக்குப் பூசனைகள் செய்து வருகின்றேன்.. என்னை ஒருவன் அடித்துவிட்டான்.. கண் கொண்டு பாரம்மா" என்று அழ, அன்னை வெகுண்டெழுந்தாள்.. இதற்குள் பகவதியில் கோட்டைக்குள் புகுந்துவிட்ட சுடலைமாடன் கோட்டையிலே பொல்லாத அட்டகாசம் செய்தார். கொடிமரத்தை ஆட்டுவதும், கோபுரத்தில் நின்று ஆடுவதுமாக செய்த அட்டகாசத்தைக் கண்ட அன்னை பகவதிக்குப் பொறுக்கவில்லை.. "யாரடா அது என் கோட்டைக்குள் அத்து மீறியது?" என்று கோபத்தோடு கிளம்பி வந்தாள்.. தன்னை இந்தக் கோலத்தில் கண்டால், அன்னையின் கோபம் ஆறாது என்று எண்ணிய சுடலைமாட சுவாமி ஏழு வயது பாலகனாக உருக்கொண்டு நடந்து வந்தார்... பாலகனைக் கண்டதும் அன்னைக்குப் பாசம் வந்து விட்டது.. இந்தச்சிறுவனா என் கோட்டையில் அட்டகாசம் செய்தது என்று எண்ணிய அன்னை அவரிடம் விசாரித்தாள்.. "பாலகா... உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?" அன்னையின் அமுதமொழி கேட்ட தனயனும் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறினார். "அம்மையே.. என்னைப் பெற்றெடுத்தாள் பார்வதியாள்.. பேர் கொடுத்தார் பரமசிவன்.. பிறந்தது சுடலையில், வளர்ந்தது கைலாயத்தில்.. என்னைப் பெற்றவர்கள் என்னை ஆகாதென்று விரட்டி விட்டனர். என்னை ஆதரிப்பார்கள் யாரும் இல்லை... பூலோகத்தில் தஞ்சம் கேட்டு உன்னை நாடி வந்தேன்" என்று சுடலை மாட சுவாமி தெரிவித்தார். "பார்வதியாள் பெற்றெடுத்தாள் என்ன? இந்த பகவதியாள் பெற்றெடுத்தாள் என்ன? மகனே.. நீயும் என் மகன்தானப்பா..உனக்கு அடைக்கலம் தந்தோம்.. உனக்கு வேண்டியதைத் தந்து பசியாற்றுவோம்." என்றாள் அம்மை பகவதி. "அம்மா... உன் ஆலயத்தை நான் தினந்தோறும் பார்க்கின்றேன்.. உனக்கு பச்சரிசி சாதத்தைத் தவிர வேறொன்றும் படைக்கக் காணோம்.. இதைத் தின்றால் எனக்குப் பசியடங்காது.." என்றார் சுடலைமாடன். "உனக்கு வேறென்ன வேண்டும் கேள்" என்று பகவதியாள் கேட்க, "ஒரு கோட்டைப் புழுங்கலரிசியில் சோறு பொங்கி ஒரே படையலாக இடவேண்டும்" என்றார் சுடலை ஈசன். "அப்படியே தந்தோம்" என்று சொல்லி அன்னையும் சுடலைக்குப் படையல் இட ஏற்பாடு செய்தாள். மேலும் அவளது ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம் தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலையிடம் ஒப்படைத்தாள். படையலைத் தின்ற சுவாமிக்குப் பசி அடங்கவில்லை.. எனவே அன்னையின் ஆலயத்துக்கு வரும் கொடியவர்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார். இதைக் கண்ட பகவதிக்குப் பொறுக்கவில்லை "மகனே இங்கே பார்... என்னை நாடி வருவோர் கெட்டோர்களென்றாலும், நல்லோர்களென்றாலும் அவர்களைக் காப்பது என் கடமை.. நீ அவர்களை வதம் செய்யக் கூடாது" என்று எச்சரித்தாள். இதைக் கேட்ட மாடனோ "அம்மையே நீ தரும் சைவப் படையல் எனக்குப் போதவில்லை.. என்ன செய்வது என்னைப் படைத்த ஈசன் இப்படிப் படைத்து விட்டார்.. நாளையிலிருந்து நான் மயானத்திற்கு வேட்டைக்குச் செல்கின்றேன். செவ்வாய் மற்றும் வெள்ளி இரவுகளில் நான் வேட்டைக்குச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அம்மையும் அனுமதி அளித்தாள். இவ்வாறாக மாடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக் கழித்து வந்தார். அந்த சமயத்தில்தான்... இப்படியாக சுடலைமாடன் கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் தங்கப் புதையலுக்குக் காவல் இருந்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது. அங்கே காளிப் பெரும்புலையன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும் மந்திரவாதி. அவனால் ஆகாத செய்கைகளே இல்லையாம். மந்திரத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திடுவான். அந்த ஊருக்கே அவன்தான் தலைவன். எனவே அவனது வீடு அரண்மனையைப் போன்று இருக்கும். அவனது மனைவி புலக்கொடியாள். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.. இதனால் மனமுடைந்த புலக்கொடியாள் தன் கணவனிடம் இதைப் பற்றி வேதனையோடு அழுதாள். அவளைத் தேற்றிய மந்திரவாதி காளிப் புலையன், அவளை பாதளகண்டி ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சென்று ஒருமண்டலம் விரதம் இருந்து அம்மனை வணங்கி வரச்சொன்னான். மனத்தின் பாரத்தோடு புலக்கொடியாளும் தவமிருந்தாள். அந்த சமயத்தில் ஔவையார் தவமிருந்த வீட்டிலிருந்த ஒரு மாவு உருண்டையைக் காகம் ஒன்று கவ்விக்கொண்டு பறந்து வந்தது.. அதே சமயத்தில் கையேந்தி தவமிருந்த புலக்கொடியாளைக் கடக்கையில் அந்த மாவு உருண்டை அவளது கைகளில் விழுந்தது. இது இறைவனின் அருளாலே விழுந்தது என்று எண்ணிய புலக்கொடியாள் அதை உண்டாள். இல்லம் சென்றாள்.. அவளும் கருவுற்றாள்.. பத்தாம் மாதம் அழகிய பெண்மகவைப் பெற்றெடுத்தாள் புலக்கொடியாள். காளிப்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன். எனவே இசக்கியின் பெயரையும், மாவு உருண்டைப் பிரசாதத்தால் பிறந்த குழந்தையாதலால் மாவின் பெயரையும் இணைத்து மாவிசக்கி என்று தன் குழந்தைக்குப் பெயரிட்டான். மாவிசக்கியானவள் சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். மிகுந்த அழகுடன் விளங்கினாள். தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் பருவமெய்தினாள் மாவிசக்கி.. தன்னிடமுள்ள ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப்புலையன்.. இன்னமும் தன் மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் உதித்தது.. அதுவே அவனது அழிவுக்கும் காரணமானது. அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும் போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக இருப்பதை அறிந்தான். எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்து வந்தான்.. மாயாண்டி சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால் கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான். வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர் கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னைக் கொள்ளையிட்டுப் போய்விட்டான். மயான வேட்டைக்குச் சென்ற சுடலைஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார் இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம் சென்றார். "அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில் வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார். அன்னை பகவதியும் "மகனே. திரவியம் போனால் போகட்டும். அவனைப் பற்றிக் கேளாதே" என்றாள். அவனைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் என்று சுடலையாண்டவர் பிடிவாதம் பிடிக்க காளிப்புலையனைப் பற்றிச் சொன்னாள் அம்மை.. "மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இந்தக் கொள்ளையைச் செய்தது.." "அம்மா விடை கொடு.. நான் அவனை அழித்து நம் திரவியத்தை மீட்டு வருகின்றேன்" என்று வீராவேசத்தோடு புறப்பட்டார் சுடலை. "பாலகா. பொறு.. அவன் மந்திரவாதத்தில் தேர்ந்தவன். அவனை யாராலும் எதிர்க்க இயலாது. அவன் செய்யும் செயல்கள் எல்லாம் விசித்திரமானவை.. பொன் போனால் போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப் பிடித்து சிமிலில் அடைத்து விடுவான். எனவே நீ போகவேண்டாம்" என்றாள் அன்னை பகவதி.. "அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் பரமனிடம் வரம் வாங்கி வந்தவனம்மா.. தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும் எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என் காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு மண்ணாக்கி விட்டு வருகின்றேன்.." என்று முழங்கினார் சுடலை.. அன்னை மேலும் மறுத்தாள்.. "அம்மையே.. இன்னும் எட்டு நாட்களுக்குள் தெரியும்.. மாயஞ்செய்யும் அந்த மந்திரவாதியா? அல்லது இந்த மாயாண்டியா? என்பது.. நீ விடை கொடு" என்று பலிவேகத்தோடு ஓலமிட்டார் சுடலை.. இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும் அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள்.. வீராவேசத்தோடு கொட்டாரக்கரையிலிருந்து கிளம்பிய சுடலை ஆண்டவர் மோசம்செய்த மோசக்காரனை நாமும் வேசம் போட்டு மோசம் செய்வோம் என்று எண்ணங்கொண்டு பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக் கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார். பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார். காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால் காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப் பலிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன் வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார். யாரோ சிவனடியார் தன் இல்லம் தேடிவந்து பிச்சை கேட்பதை அறிந்த மாவிசக்கி அன்னம் எடுத்துக் கொண்டு பிச்சையிட வாசலுக்கு வந்தாள். அவள் தெற்கு வாசலுக்கு வந்தால், சுடலை வடக்கு வாசலுக்குச் சென்று பிச்சை கேட்பதும், அவள் வடக்கு வாசலுக்கு வந்தால், சுடலை தெற்குவாசலுக்கு வந்து பிச்சை கேட்பதுமாக அவளை அலைக்கழித்தார். இதனால் மாவிசக்கி கோபமடைந்தாள்.. "அடேய் கிழட்டுப் பண்டாரம். பிச்சை எடுக்க வந்தால், கொடுத்ததை வாங்கி விட்டுப் போகவேண்டியதுதானே... ஏன் இப்படி விளையாடுகின்றாய்?" என்று கோபத்தோடு சுடலையை நோக்கிக் கேட்டாள். "பெண்ணே மாவிசக்கி... நான் பிச்சை கேட்டு வரவில்லை.. உன்னைப் பெண் கேட்டு வந்தேன்." "என்னைப் பெண் கேட்டு வந்தாயா? இந்த சொல்லை மட்டும் என் தந்தை பெரும்புலையன் கேட்டால், உன்னை இல்லாது செய்து விடுவார்... மரியாதையாக ஓடிப்போ" என்றாள் மாவிசக்கி.. "எனக்குத் தராமல் உன்னை யாருக்குத் தருவான் உன் தந்தை? சரி எனக்குத் தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று அதிகாரத் தோரணையோடு கேட்டார் சுடலை. "தண்ணீரெல்லாம் இல்லை.. தரமுடியாது.. ஓடிப்போ" என்று மாவிசக்கி சொல்ல.. "அடியே மாவிசக்கி.. உன் தகப்பனுக்கு பசும்பாலை எடுத்து அந்த அங்கே வைத்திருக்கின்றாயே... எனக்கு நீர் கூட இல்லை என்றா சொல்கின்றாய்.. உன் அப்பன் இருக்கும் போதே யாரும் அறியாமல் உன்னைக் கற்பழிப்பேன் பாரடி.." என்று சொல்லி சபதம் செய்து மாயமாய் மறைந்தார் மாயாண்டி சுடலை.. இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள் மாவிசக்கி.. தன் தந்தை வந்ததும் இதனைத் தெரிவித்தாள். யாரோ ஒரு கிழட்டுப் பண்டாரம் தன் வாசலில் பிச்சை கேட்டு வந்து பின்னர் தன் மகளைக் கற்பழிக்க நாள் குறித்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தான் காளிப்பெரும்புலையன். அஞ்சன மையெடுத்து யாரென்று பார்த்தால் அவனால் எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.. மாந்திரீகத்தில் பெரியவன் என்று பெயரெடுத்த என்னையே ஒருவன் ஏமாற்ருகிறான் என்றால், நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து மாவிசக்கிக்கு மந்திரக் காவல் அமைத்தான். ஏழு அறைகளை அடுக்கடுக்காக அமைத்து நடுவறையிலே பெண்ணை அமரச்செய்தான்... யாரும் அதனை நெருங்க இயலாத வண்ணம் தன் மாந்திரீகத்தால் வளையம் அமைத்தான்... ஆனாம் நம் சுடலைமாட சாமியை எந்தக் காவல்தான் தடுத்து நிறுத்தும்? இரவிலே எறும்பு உருக்கொண்டு மாவிசக்கியின் அறையை அடைந்தார் சுடலைமாட சாமி... அவள் அறியாமலேயே அவளைக் கற்பழித்தார். வந்த சுவடு இல்லாமல் வெளியேறினார். மறுநாள் காலையில் மகளை எழுப்ப வந்த புலக்கொடியாள் மகளில் நிலையக் கண்டு அதிர்ந்தாள்.. மாவிசக்கியும் கண்ணாடியில் தன் கோலம் கண்டு அழத்துவங்கினாள். பெரும்புலையன் அதிர்ந்தான்... தன் மாந்திரீகம் பொய்த்ததை எண்ணி பயந்தான். வந்தவன் மிகப்பெரிய ஆள். தன்னால் அவனை எதிர்க்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டான். ஆயினும் அவன் மனத்தில் வந்தவன் யாரென்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது... மைபோட்டு பார்த்தான்.. ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.. யாராலும் சொல்ல முடியவில்லை... மாவிசக்கி கர்ப்பமானாள்... இத்தோடு விட்டாரா சுடலைமாடன்? என் அன்னையின் ஆலயத்தில் புகுந்து திருடியவனைக் குடும்பத்தோடு பழிதீர்ப்பேன் என்று சபதம் செய்தாரில்லையா? எனவே பெரும்புலையனைக் குடும்பத்தோடு அழிக்க நாள் பார்த்துக் காத்திருந்தார். மாவிசக்கி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்... ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்தார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் சோலையை நாசம் செய்தால், புலையன் நேரில் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என்று எண்ணிய சுடலைமாட சுவாமி, பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்த ஓர் நாள் இரவு சோலைக்குள் புகுந்து அதனை முற்றிலும் நாசம் செய்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த பளியன்மார்கள் அதிர்ச்சியில் புலையனிடம் ஓடி வந்தார்கள்.. புலையனும் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான். புலையன் காக்காச்சி மலைக்கு செல்ல இருப்பதை அறிந்த புலக்கொடியாள் அவனைத் தடுத்தாள். "போகவேண்டாம் அன்பரே.. நான் பொல்லாத கனவு கண்டேன்." என்று சொன்னாள். "யாராலும் என்னை எதுவும் செய்ய இயலாது.. நீ என்னைத் தடுக்காதே" என்று சொல்லிவிட்டு புலையன் புறப்பட்டுச் சென்றான்.. பளியர்களின் சோலையில் அமர்ந்து மை போட்டு பார்த்த போது அவனால் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.பிறகு சுடலைமாடன் தானே அவன் நேரில் பிரசன்னமானார்.. தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினார். "என் அன்னையின் ஆலயம் புகுந்து கொள்ளையடித்த பெரும்புலையா.... உன்னை சந்திக்கவே நேரம் காத்திருந்தேன்..:" என்று அவன் கையிலிருந்த திரு நீற்றுத் தாம்பூலத்தைப் பிடுங்கி அவன் சென்னியில் ஒரே அடி. நடுங்கிப்போனான் காளிப்புலையன். "ஐயா உன் பலம் அறியாது உன் காவலில் இருந்த திரவியங்களைக் கொள்ளை கொண்டு வந்து விட்டேன். என்னை மன்னித்து விடு... நாம் பங்காளிகளாக இருப்போம்" என்று சுடலைமாடனிடம் பேரம் பேச ஆரம்பித்தான் காளிப்புலையன். "என்ன? என்னுடன் பங்காளியா? எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று கேட்டார் சுடலைமாடன். "என்ன வேண்டுமானாலும் தருகின்றேன்.." என்றான் புலையன். "ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம் வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில் செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே படைப்பாகவும் போட வேண்டும்" "அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. " "அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப் பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார். மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார். இதில் மயங்கிய பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும் கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம் என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன். வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான். "மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகின்றேன்.. நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான். "அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. நான் அதைப் போன்ற பலி கொடுப்பதையெல்லாம் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள். அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான். ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான். மாவிசக்கியும் புரிந்து கொண்டாள். "அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்.. அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன். அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக் கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார். பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்... சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோயிலில் உள்ள அனைத்துத் தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான். குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பிவிட்டான். வீட்டுக்கு வந்தான்.. புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்.. புலையனுக்கு சாப்பாடு வைத்தாள். குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள். நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது. "ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில் மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது. சிமில் வெடித்தது.. ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி.. "அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா? என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை அடித்தார்... அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்.. தன் அன்னையின் ஆலயத்திலிருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற திரவியங்களை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார்.. அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார்.. "அன்னையே... இப்போது புரிந்ததா உன் மகனின் பராக்கிரமம்?" என்று அன்னை பகவதியை வணங்கி நின்றார். "மெச்சினோம். மகனே... ஆனால் நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா... தெய்வங்கள் எல்லோரும் மனிதர்களை ரட்சிக்கத்தான் வேண்டும்... நீயும் வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள். "அப்படியே செய்கின்றேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார். நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார். குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும், அம்பிகையையும் வணங்கினார்... பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்...

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக