நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது?

சுந்தரமடம் என்பது சுவாமி சிரானந்தரின் மடம். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். குருநாதர் மிகவும் நல்லவர். சீடர்களுக்கு நல்லறிவையும், ஞானத்தையும் போதிப்பவர். ஒரு முறை கூட அவர்கள் தவ வலிமையிலிருந்து தவறி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தார் குருநாதர்.


ஒரு முறை அவர் தனது சீடர்களை அழைத்தார். ஒரு பெரிய மரத்தடியில் அவர்களுடன் அமர்ந்தார். ""சீடர்களே! நான் இப்போது ஒரு கேள்வி கேட்பேன். அந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் கூறுகிறவனே இந்த மடத்தில் தலைமை சீடனாக பணி செய்ய தகுதி உடையவன். அதோடு என் ஆயுளுக்குப் பின்பு இந்த மடத்தின் தலைமை குரு பதவியும் அந்தச் சீடனுக்கே கிடைக்கும்,'' என்றார். பல புத்தியுள்ள சீடர்கள் அப்போதே தலைமை சீடர் பதவியும், பிற்காலத்தில் குருநாதர் பதவியும் தங்களுக்குத்தான் என்று முடிவு செய்து விட்டனர். மற்ற எல்லா மாணவர்களும் போட்டியில் வெல்லும் ஆவலுடன் காத்திருந்தனர்.


குருநாதர் தன் சீடர்களைப் பார்த்து, ""நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது? மிகவும் மோசமான உறுப்பு எது?'' என்று கேட்டார். உடனே சீடர்கள் மிகவும் மகிழ்ந்தனர். "இது என்ன? இந்த பதில் கூடவா தெரியாமல் இருப்போம். இத்தனை சாதாரணமான கேள்வியை குரு கேட்டு நம் அறிவைத் தாழ்வாக எடைப் போட்டு விட்டாரே' என்று சலித்துக் கொண்டனர். சீடர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். சிலர், ""நமது உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு கைகள்தான். அவைதான் நமக்காக அதிகம் உழைக்கின்றன. எனவே, அவை தான் சிறந்த உறுப்பு என்றும், அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்பே மோசமான உறுப்பு என்றனர்.


எல்லாரும் அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்புகளையே மோசமான உறுப்புகள் என்றனர். மற்றபடி உயர்ந்த உறுப்புகள் என்பதற்கு கண்கள் பார்க்க உதவுவதாகவும், கால்கள் போக்குவரத்துக்கு உதவுவதாகவும் இப்படி காது, வயிறு, பல், நாக்கு என்று பல உறுப்புகளையும் அவைகளின் உபயோகத்தையும் கூறி குறிப்பிட்டனர். குருநாதர் அனைத்தையும் வெகு கவனமாக கேட்டார். அந்த மாணவ சீடர்களுள் முரளி என்றொரு சீடன் இருந்தான். அவன் எப்போதுமே மிகவும் நல்ல சிந்தனையாளன். நிதானித்து பேசுபவன்; யோசித்து செயல்படுபவன். எல்லாரிடமும் பணிவுடனும், அன்புடனும் பேசிப் பழகுபவன். குருநாதர் கேள்வி கேட்ட போது அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். எனவே, குருநாதர் அவனிடம், ""சீடனே! என் கேள்வியின், பதிலை நீ கூறலாமே,'' என்று கேட்டார். உடனே முரளி தன் குருநாதரை பணிந்து எழுந்தான்.
""குருநாதரே! இந்த உலகில் மிகவும் பெருமை வாய்ந்த உறுப்பு நமது நாக்குதான். ஏனென்றால், ஒரு மனிதனை மற்றவர்கள் மதிக்கும்படி செய்வது அவனது நாக்குதான். அந்த நாக்கின் பேச்சைத் தான் மக்கள் வெகுவாக கவனிக்கின்றனர். அந்தப் பேச்சின் தரத்தை வைத்து அவர்கள் மனிதர்களை மதிக்கின்றனர். ஒரு மனிதனுக்கான மிகச் சிறந்த மதிப்பீட்டு உறுப்புகளில் மிகச் சிறந்த உறுப்பு நாக்குதான்,'' என்று கூறினான். அதைக் கேட்ட குருநாதர் மிகவும் மகிழ்ந்தார். ""முரளி! உன் பதில் சரியானது. இனி மனித உறுப்புகளில் மிக மோசமான உறுப்பு எது என்று கூறு பார்க்கலாம்,' என்றார். உடனே முரளி, "நாக்குதான் உறுப்புகளிலேயே மிகவும் மோசான உறுப்பு...' என்றான். இதைக் கேட்ட மாணவர்கள் சிரித்தனர்.


""இப்போதுதான் நாக்கை மிகவும் உயர்ந்த உறுப்பு என்றாய். உடனே மோசமான உறுப்பு என்கிறாயே?'' என்று கேட்டனர். ""ஆமாம்! நல்லதைப் பேசி ஒரு மனிதனை உயர்வாக எண்ணச் செய்வதும் நாக்குதான். மோசமாகவும், இழிவாகவும் பேசி ஒரு மனிதனின் தரத்தைச் தாழ்த்தி அவனை மோசமான மனிதனாக மதிப்பிட வைப்பதும் நாக்குதான். எனவே, இந்த உலகின் மிகவும் மோசமான உறுப்பு நாக்குதான்,'' என்று விளக்கினான். அவனது பதிலே சிறந்த சரியான பதில் என்று குருநாதர் முடிவு செய்தார். அவனை தலைமை சீடனாக ஒப்புக் கொண்டார். 



... நம் நாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தீர்களா? நம்மை உயர்வடைய செய்வதும், தாழ்வடையச் செய்வதும் நாக்குதான். எனவே, கவனமாக பேச வேண்டும். சரியா?

நன்றி தினமலர்! rolleyes.gif

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக