சொர்க்கமும் நரகமும்

ஒரு சமயம் குரு நானக் சொர்க்கம் என்றால் என்ன ? நரகம் என்றால் என்ன? என்று அறிய கடவுளை காண சென்றார். குரு நானக் தன் மனதில் எழுந்த கேள்வியை கடவுளிடம் கூறினார்.

இதை கேட்ட கடவுள் மென்மையாக சிரித்துவிட்டு "அதோ தெரிகிறது பார் ஒரு கதவு அதை திறந்து பார் உன்னுடைய கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று கூறினார்.

குரு நானக் பெயர் ஏதும் எழுதபடாத அந்த கதவை திறந்து பார்த்தார்.

அங்கு ஒரு மேடையின் மீது நிறைய வித்தியாசமான ருசிமிக்க உணவுகளும், அபூர்வ வகை பழங்களும் மற்றும் நிறைய அமுத பானமும் இருந்தன. அந்த மேடையை சுற்றி மனிதர்கள் மிகவும் துன்பத்துடன் இருந்தனர். அவர்கள் கையில் மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி இருந்தது. அவற்றை கொண்டு அந்த உணவுகளை மனிதர்கள் சாப்பிட துடித்தனர் ஆனால் மிக நீண்ட கரண்டி என்பதால் அவர்களால் உணவுகளை வாயருகே கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த காட்சியை கண்ட குரு நானக் அதிர்ச்சி அடைந்தார். இது தான் நரகம் என்று அறிந்தார்.

மீண்டும் கடவுளிடம் சென்று, "நான் உண்மையான நரகத்தை பார்த்துவிட்டேன், சொர்க்கம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்" என்று சொன்னார்.

கடவுள் அதே கதவை திறந்து பார் என்றார். குரு நானக் மீண்டும் அந்த பெயர் இல்லாத கதவை திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆனந்தத்தில் மூழ்கடித்தது.

அங்கும் ஒரு மேடையின் மீது ருசி மிக்க உணவு வகைகளும், அரிய பழ வகைகளும் மற்றும் அமுத பானமும் நரகத்தில் இருந்தது போலவே மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி தான் இருந்தது. ஆனால் அங்கு மனிதர்கள் ஒருவர் கரண்டியை கொண்டு மற்றவருக்கு ஊட்டி தானும் மற்றவர் கரண்டியால் ஊட்டும் உணவினை உண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதை கண்ட குரு நானக் இதுவே சொர்க்கம் என்று மனம் தெளிந்தார்.

பிறகு கடவுளிடம் வந்து, "சொர்க்கம் எது ? நரகம் எது ? என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன்" என்றார்.

கடவுள் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி "சொர்க்கமும் நரகமும் வாழும் நம் வாழ்கையில் தான் உள்ளது. நரகத்தில் தான் மட்டும் உண்ண வேண்டும் என்று சுயநலத்துடன் நினைப்பதால் அவர்களால் அந்த நீண்ட கரண்டியை கொண்டு உணவை சாப்பிட முடியாமல் துன்பம் அடைகிறார்கள், அதே சொர்க்கத்தில் அந்த நீண்ட கரண்டியை கொண்டு சுயநலம் இன்றி மற்றவர்களுக்கு அந்த கரண்டியை கொண்டு ஊட்டி தானும் அதன் மூலம் பயன் அடைகிறார்கள். இதில் இருந்து நாம் அறியும் உண்மை மற்றவர்களை வாழவைத்து, நாமும் அதன் மூலம் வாழ்வதுதான் உண்மையான சொர்க்கம். இந்த உண்மையின் தத்துவத்தை அனைவருக்கும் நீ எடுத்து கூறுவாயாக", என்று கடவுள் குரு நானக்கிடம் சொன்னார். அதனை குரு நானக் அவர்களும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொன்னார்.

Best Blogger Gadgets

2 கருத்துகள் :

கருத்துரையிடுக